சில சந்தேகங்களும் விளக்கங்களும்
பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி பதில் வடிவில் பதில் அளித்துள்ளோம்.
உலகமெல்லாம் ஒரே கிழமை
உலகம் முழுவதும் ஒரே கிழமை தான் வருகின்றது. சவூதியில் வெள்ளிக்கிழமை என்றால் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையாகத் தான் உள்ளது. அங்கே வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழும் போது இங்கேயும் ஜும்ஆ தொழுகின்றோம். பெருநாளை மட்டும் அங்கே வெள்ளிக்கிழமை என்றால் இங்கே சனிக்கிழமை எப்படி கொண்டாட முடியும்?
உலகம் முழுவதும் ஒரே பிறை என்று வாதிடக் கூடியவர்கள் இதையே பெரிய ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
உலகம் சுருங்கி விட்டது விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகி விட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போல் நாம் உம்மியல்ல. நாங்கள் அறிவியல் மேதைகள் என்று கூறுபவர்களின் விஞ்ஞான அறிவு எந்த அளவுக்கு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள அவர்களின் இந்தக் கேள்வி போதுமானது.
உலகம் முழுவதும் ஒரே கிழமையாகத் தான் உள்ளது என்ற அவர்களது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதை முடிவு செய்யப் பெரிய அறிவியல் ஞானம் ஒன்றும் தேவையில்லை. சாதாரணமாகச் சிந்தித்தாலே போதும்.
இஸ்லாமிய அடிப்படையில் ஒரு நாள் என்பது மக்ரிபிலிருந்து துவங்குகிறது. உதாரணமாக வெள்ளிக்கிழமை மாலையில் சூரியன் மறைந்ததும் சனிக்கிழமை உதயமாகி விடுகின்றது. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.
இப்போது சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சூரியன் மறைந்து விட்டால் சனிக்கிழமை உதயமாகி விடுகின்றது. அந்த நேரத்தில் சவூதியில் வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியாக இருக்கும்.
சென்னையில் சனிக்கிழமையாக இருக்கும் அதே நேரத்தில் சவூதியில் வெள்ளிக்கிழமையாக இருக்கிறது. (சூரியக் கணக்கு அடிப்படையில் பார்த்தால் நள்ளிரவு பன்னிரண்டு மணியை உதாரணமாகக் கொள்ள வேண்டும்.)
இதைப் புரிந்து கொள்வதற்கு சில விஞ்ஞான விளக்கங்களைப் பார்ப்போம்.
உருண்டை வடிவிலுள்ள பூமி தன்னைத் தானே சுற்றுவதால் இரவு பகல் ஏற்படுகின்றது. பூமி சுற்றிக் கொண்டேயிருப்பதால் இந்தியாவில் சூரியன் உதயமாகும். அதே நேரத்தில் இந்தியாவிற்கு எதிர் கோடியிலுள்ள மற்றொரு நாட்டில் சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருக்கும்.
இப்படி ஒவ்வொரு நாட்டிலும் இரவு பகல் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் என்பதை எதிலிருந்து துவக்குவது என்பதில் தடுமாற்றம் ஏற்பட்டது.
இதனால் ஒரு சீரான நிலையை ஏற்படுத்துவதற்காக பூமியின் ஓர் இடத்தை மையமாக வைத்து அதிலிருந்து தேதியைக் கணக்கிட வேண்டும் என்ற முடிவுக்கு புவியியல் விஞ்ஞானிகள் வந்தனர். அந்த அடிப்படையில் ஒரு கடல் பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கே சர்வதேச தேதிக்கோடு (உஹற்ங் கண்ய்ங்) என்ற மையத்தை உருவாக்கி அந்த இடத்தை தேதி கிழமை மாறும் இடமாக உலகம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.
1884ஆம் ஆண்டு இந்த முடிவு எட்டப்பட்டது. இதன்படி சர்வதேச தேதிக் கோட்டில் நள்ளிரவு 12 மணியைக் கடக்கும் நேரத்தில் ஒரு நாள் பிறப்பதாகக் கணக்கிடப்படுகிறது.
சர்வதேச தேதிக் கோட்டினை பூமி கடக்கின்ற அந்த ஒரு மைக்ரோ வினாடி மட்டுமே உலகம் முழுவதும் ஒரே கிழமையாக இருக்கும். அதாவது அந்த வினாடியில் தேதிக் கோட்டின் கிழக்குப் புறத்தில் உள்ள நாடு வெள்ளிக்கிழமையின் ஆரம்பத்திலும், மேற்குப்புறம் உள்ள நாடு வெள்ளிக்கிழமையின் இறுதியைக் கடந்து சனிக்கிழமையைச் சந்தித்துக் கொண்டிருக்கும்.
சவூதிக்கும் இந்தியாவிற்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசப்படுவது போல் தேதிக் கோட்டின் கிழக்கு மற்றும் மேற்குப் புறத்தில் உள்ள இரண்டு நாடுகளுக்கும் இடையில் 24 மணி நேரம் வித்தியாசப்படுகிறது. இதனால் பக்கத்து பக்கத்து இரு நாடுகளுக்கிடையில் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது.
இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் இங்கிருந்து சவூதி சென்றவுடன் 2.30 மணி நேரத்தை உங்கள் கடிகாரத்தில் குறைத்துக் கொள்ளுங்கள் என்று விமானத்தில் அறிவிப்புச் செய்வார்கள். அதே போல் விமானத்தில் சர்வதேச தேதிக் கோட்டைக் கடந்து செல்லும் போது நேரத்தை மாற்றச் சொல்வதில்லை. மாறாக ஒரு தேதியை ஒரு கிழமையை மாற்றிக் கொள்ளச் சொல்வார்கள்.
உதாரணமாக சர்வதேச தேதிக் கோட்டிற்கு அருகிலிருக்கும் நியூசிலாந்து ஹானலுலு ஆகிய இரு தீவுகளை எடுத்துக் கொள்வோம். நியூசிலாந்தில் காலை எட்டு மணியாக இருக்கும் போது ஹானலுலுவில் காலை நேரம் 10 மணியாக இருக்கும். ஆனால் நியூசிலாந்தில் வெள்ளிக்கிழமையாகவும் ஹானலுலுவில் வியாழக்கிழமையாகவும் இருக்கும். இரண்டு நாடுகளிலும் ஒரே இரவில் முதல் பிறை தென்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு தென்பட்டால் நியூசிலாந்து ஹானலுலு ஆகிய இரு நாடுகளிலும் ஒரே நாளில் தான் நோன்பு வைக்க வேண்டும். ஆனால் நியூசிலாந்தில் வெள்ளிக்கிழமையாகவும் ஹானலுலுவில் வியாழக்கிழமையாகவும் இருக்கும். நியூசிலாந்தில் பிறை பார்த்து, ஹானலுலுவில் பிறை பார்க்காவிட்டால் அப்போது இரண்டு நாட்கள் வித்தியாசம் ஏற்படும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் ஒரே நாள் தான் என்று வாதம் செய்பவர்களிடம் நாம் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறோம்.
ஹானலுலு நாட்டில் வியாழக்கிழமை அன்று சுப்ஹு தொழுதுவிட்டு அன்றைய லுஹருக்கு நியூசிலாந்த் நாட்டிற்குச் சென்று விடுகின்றோம். ஆனால் அங்கே வெள்ளிக்கிழமை. இப்போது நாம் ஜும்ஆ தொழ வேண்டுமா? வியாழக்கிழமையின் லுஹர் அஸர் மக்ரிப் இஷா மறுநாள் சுப்ஹு ஆகிய தொழுகைகளைக் களாச் செய்ய வேண்டுமா?
நியூசிலாந்து நாட்டில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுது விட்டு அன்றே ஹானலுலு செல்கிறோம். அங்கே மறு நாள் ஜும்ஆ அதனால் அது வரையிலான தொழுகைகளை நிறைவேற்றாமல் விட்டுவிட்டு மறுநாள் அஸர் தொழுகையிலிருந்து தொழுதால் போதுமா? அல்லது அடுத்தடுத்த நாளில் இரண்டு ஜும்ஆக்கள் தொழ வேண்டுமா?
நியூசிலாந்து நாட்டில் வியாழக்கிழமை காலை பத்து மணிக்கு ஒளிபரப்பும் கிரிக்கெட்டை ஹானலுலுவில் புதன்கிழமையே பார்க்கிறோம். வியாழனில் நடப்பதை புதனில் (அதாவது விளையாட்டு நடப்பதற்கு முன்பே) எப்படிப் பார்க்க முடிகிறது.
ஹானலுலு நாட்டில் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 22ந் தேதி காலை பத்து மணிக்குத் துவங்குகிறது. அதே நாளில் காலை எட்டு மணிக்கு நியூசிலாந்து தொலைக்காட்சியில் அதன் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது 23ம் தேதியின் காலை எட்டு மணி. இது எப்படி சாத்தியம்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உலகம் முழுவதும் ஒரே நாள் என்று வாதிடுபவர்கள் பதில் சொல்ல வேண்டும். சம்பந்தமில்லாத நான்கு குர்ஆன் வசனங்களைப் போட்டுவிட்டு ஒரே சூரியன் ஒரே சந்திரன் என்று வியாக்கியானம் செய்பவர்களும் அது தங்களுடைய கருத்துக்கு ஆதரவாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் அதற்கு அணிந்துரை மதிப்புரை எழுதுபவர்களும் மேலே நாம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
இதில் வேடிக்கை என்னவென்றால் சர்வதேச தேதிக்கோடு மனிதர்களால் வரையப்பட்ட கற்பனையான கோடு தான். இந்தக் கோடு ஏதேனும் ஒரு நாடு வழியாகச் சென்றால் ஒரே நாட்டில் ஒரே நாளில் வெவ்வேறு தேதி வெவ்வேறு கிழமை ஏற்பட்டு அதனால் குழப்பங்கள் தோன்றும் இதைத் தவிர்ப்பதற்காக சர்வதேச தேதிக் கோடு எந்த நாடு வழியாகவும் செல்லாத வண்ணம் ஒரு கடல் பகுதியைத் தேர்ந்தெடுத்து வரையப்பட்டது. இந்த தேதிக் கோடு இந்தியாவிற்கும் சவூதிக்கும் மத்தியில் வரையப்பட்டிருந்தால் இரண்டரை மணி நேர வித்தியாசத்திலேயே வெவ்வேறு கிழமைகளை வெவ்வேறு தேதிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் மறந்து விடக் கூடாது.
உலகம் எப்போது அழியும்?
உலகம் ஒரு நாளில் அழிக்கப்படும் என்று 83:5, 69:15 வசனங்களில் கூறப்படுகிறது பிறை 1ல் உலகம் அழிக்கப்படும் என்று வைத்துக் கொண்டால் சவூதி பிறை ஒன்றிலா? அல்லது இந்தியா பிறை ஒன்றிலா?
உலகம் வெள்ளிக்கிழமை தான் அழிக்கப்படும் என்று ஹதீஸ்களில் உள்ளது. இது ஒரே கிழமையில் தான் நிகழும் எனும் போது உலகம் முழுவதும் ஒரே கிழமை தான் என்பதில் என்ன சந்தேகம்? என்றும் கேட்கின்றனர்.
உலகம் முடிவு நாள் வெள்ளிக்கிழமை நடக்கும் என்று ஹதீஸ் உள்ளது. ஆனால் பிறைக் கணக்கில் 1ல் தான் அழிக்கப்படும் என்றோ 2ல்தான் அழிக்கப்படும் என்றோ ஹதீஸ் இல்லை.
குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விஞ்ஞானத்தை உரிய முறையில் விளங்கினால் நிச்சயமாக இந்தக் கேள்விகளுக்குப் பதில் கூற முடியும்.
ஒவ்வொரு நாளும் தேதிக் கோட்டை பூமி கடக்கும் அந்த மைக்ரோ வினாடியில் உலகம் முழுவதும் ஒரே கிழமை. தேதியில் இருக்கும் என்பதை முன்னர் கூறியுள்ளோம். அதாவது இந்த நிலையை அடையும் போது தேதிக் கோட்டின் கிழக்குப் புறம் உள்ள பகுதி கிழமையின் துவக்கத்திலும் தேதிக் கோட்டின் மேற்குப்புறம் உள்ள பகுதி அதே கிழமையின் இறுதியிலும் இருக்கும்.
இந்த விநாடியில் மட்டுமே உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையாக இருக்கும். இது மனிதன் வரைந்த கற்பனையான கோட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை.
அல்லாஹ் பூமியைப் படைத்து நாள் கணக்கைத் துவக்கிய அந்த நேரத்தை அவன் தான் அறிவான். அல்லாஹ் அமைத்த உண்மையான அந்தத் தேதிக் கோட்டின் அடிப்படையில் ஒரு வினாடியில் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையாக இருக்கும் போது உலகத்தை அழிப்பது அவனுக்குச் சிரமமான காரியமில்லை.
ஆதம் (அலை) அவர்கள் குறித்த ஹதீஸுக்கும் இதே விளக்கத்தைக் கொடுக்க முடியும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
இரண்டு நாள் வித்தியாசம் ஏன்?
சவூதிக்கும் நமக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் ஆனால் சவூதி பிறைக்கும் நமது பிறைக்கும் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் வித்தியாசம் வருகின்றதே அது எப்படி? உதாரணமாக சவூதியில் 8ந் தேதி பெருநாள் என்றால் நமக்கு 9 அல்லது 10ந் தேதியில் தான் பெருநாள் வருகிறது. அது எப்படி?
முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சவூதிக்கும் நமக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் என்பது சூரியனுடைய கணக்கின் அடிப்படையில் ஏற்படுவதாகும். சூரியனின் உதயம் அஸ்தமனம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நேரத்தைத் தீர்மானிக்கிறோம். அதாவது சென்னையில் சூரியன் மறைந்து கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் கழித்து சவூதியில் சூரியன் மறையும். இது சூரியக் கணக்கு இதை பிறை தென்படுவதற்கு அளவு கோலாக எடுக்க முடியாது.
உதாரணமாக சவூதியில் 8ந் தேதி மாலை 6.30 மணிக்கு முதல் பிறை பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் நமது நாட்டில் இரவு 9.00 மணி. அதாவது சவூதியில் பிறை பார்த்த நேரத்தை விட இரண்டரை மணி நேரத்தைக் கடந்திருப்போம். தலைப்பிறையை ஒன்பது மணிக்கெல்லாம் பார்க்க முடியாது. சவூதியில் பார்த்த பிறையை நாம் பார்க்க வேண்டுமானால் நமது நாட்டில் மறுநாள் (9ந் தேதி) மாலை 6.30 அல்லது ஏழு மணிக்குத் தான் பார்க்க முடியும்.
சூரிய உதயத்தை நாம் சவூதியை விட இரண்டரை மணி நேரம் முன்னதாக அடைகிறோம். அதே சமயத்தில் சந்திரன் தென்படும் நிலையை அவர்களை விட சுமார் 21.30 மணி நேரம் பிந்தி அடைகிறோம். இதனால் நமது நாட்டில் பிறை தென்படும் நாளில் சவூதியில் பிறை 2 ஆக இருக்கும் வாய்ப்பிருக்கிறது. (ஒரே நாளிலும் தெரியலாம்) எனவே சந்திரன் அடிப்படையில் மாதத்தைத் தீர்மானிக்கும் போது சூரியக் கணக்கில் உள்ள நேர வித்தியாசத்தைப் பொருத்திப் பார்க்கக் கூடாது.
சவூதிக்கும் நமக்கும் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுவது இயற்கையானது தான். அல்லாஹ்வும் அதனால் தான் அம்மாதத்தை யார் அடைகிறாரோ என்று கூறுகின்றான். இதை ஏற்கனவே கூறியுள்ளோம்.
இரண்டு நான் வித்தியாசம் வருகின்றதே இது எப்படி?
எப்படிப் பார்த்தாலும் ஒரு நாளுக்கு மேல் வித்தியாசம் ஏற்பட சாத்தியமில்லை என்பது உண்மை தான். இரண்டு நாள் வித்தியாசம் ஏற்படுவதற்கு ஒரு தரப்பில் ஏற்படும் தவறுகள் தான் காரணம்.
பொதுவாக அமாவாசை முடிந்து 20 மணி நேரம் ஆவதற்கு முன்னால் உலகில் எந்தப் பகுதியிலும் பிறை தென்படுவதற்கு வாய்ப்பில்லை. 20 மணி நேரத்திற்குப் பின் ஏதேனும் ஒரு நாட்டில் பிறை தெரிய ஆரம்பித்து எல்லா நாட்டிற்கும் தெரிவதற்கு சுமார் 20 மணி நேரம் ஆகும். அதாவது அமாவாசை முடிந்த பின்னர் பிறை தென்படுவதற்கு சுமார் 20 மணி நேரத்திலிருந்து நாற்பது மணி நேரம் வரை ஆகும். இந்த காலவரையறைக்கு முன்னதாக யாராவது பிறை பார்த்ததாகக் கூறினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை இது வரை பிறை பார்த்ததாக அறிவித்த பல ஆண்டுகளில் பிறை தென்படுவதற்கே வாய்ப்பில்லாத நேரத்தில் பிறை பார்க்கப்பட்டதாகத் தான் அறிவித்துள்ளார்கள். இதை நாம் சுயமாகச் சொல்லவில்லை. லண்டனிலிருந்து வெளியாகும் என்ற ஈழ்ங்ள்ஸ்ரீங்ய்ற் என்ற பத்திரிகையும் மலேசியாவிலுள்ள சர்வதேச இஸ்லாமிய தேதி கவுன்சில் என்ற அமைப்பும் மற்றும் நமது நாட்டிலுள்ள வானியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.
சவூதி எந்த அடிப்படையில் இவ்வாறு அறிவிக்கின்றது என்பது நமக்குத் தெரியவில்லை.
சந்திர சுழற்சியின் அடிப்படையில் சவூதிக்கும் நமக்கும் இடையில் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது. சவூதியின் தவறான நிலைபாட்டினாலும் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது. இதனால் தான் சவூதி அரசாங்கம் பிறை பார்த்ததாக அறிவித்த நாளுக்கும் நாம் பிறை பார்க்கும் நாளுக்கும் இரண்டு நாட்கள் வித்தியாசம் ஏற்படுகின்றது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிறை பார்த்து அல்லது குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து தகவல் வந்தால் அதை ஏற்று மக்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த போது ஒரு பகுதிக்கும் மற்றோர் பகுதிக்குமிடையில் ஒரு நாள் மட்டுமே வித்தியாசம் இருந்து வந்தது.
புதிதாக சவூதியிலிருந்து நோன்பு, பொருநாள் ஆகியவற்றை இறக்குமதி செய்ததால் தான் தமிழ்நாட்டிற்குள்ளேயே இரண்டு நாட்கள் வித்தியாசம் ஏற்பட ஆரம்பித்தது.
உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாளைக் கொண்டு வர வேண்டும் என்று கூறி அறிமுகப்படுத்தப்பட்டது தான் சவூதி பெருநாள் கொள்கை. இதன் மூலம் இரண்டு நாட்களில் பெருநாளைச் சந்தித்துக் கொண்டிருந்த தமிழகத்தில் மூன்று நாட்கள் பெருநாள் ஏற்படுவதற்கு வழி வகுத்ததைத் தவிர வேறு எந்தச் சாதனையையும் இந்தக் கொள்கை ஏற்படுத்தவில்லை என்பது நிதர்சனமாக உண்மையாகும்.
பிறையை ஒவ்வொரு பகுதியிலும் பார்த்தே தீர்மானிக்க வேண்டும். பிறை தென்படாத பகுதிகள் முந்தைய மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் கூறியுள்ளோம். மார்க்கம் நமக்குக் கற்றுத் தந்த இந்த எளிமையான நடைமுறையை ஒவ்வொரு பகுதியினரும் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டால் உலகம் முழுவதும் ஒரு நாளுக்கு மேல் வித்தியாசம் ஏற்பட வாய்ப்பில்லை. அந்த நிலை விரைவில் ஏற்பட்டுவிடும் என்று நம்புவோம். இன்ஷாஅல்லாஹ்.
எத்தனை லைலத்துல் கத்ர்?
லைலத்துல் கத்ர் என்ற பாக்கியமிக்க இரவு ஒற்றைப்படை இரவுகளில் தான் அமையும் என்பது நபிமொழி. ஆளுக்கு ஒரு தலைப்பிறை இருந்தால் பாதிப் பேருக்கு லைலத்துல் கத்ர் கிடைக்காதே? எனவே உலகம் முழுவதும் ஒரே நாளில் தான் நோன்பைத் துவக்க வேண்டும். இன்றிரவு இங்கே பிறை பார்க்கிறோம். இந்த நேரத்தில் அமெரிக்காவில் பகலாக இருக்கும். பகல் எப்படி லைலத்துல் கத்ராக, அதாவது கத்ருடைய இரவாக ஆகும்?
அடுத்து வரும் இரவில் தான் பிறை என்று கூறினால் இங்கே லைலத்துல் கத்ர் ஏற்பட்டு 24 மணி நேரம் கழித்துத் தானே அமெரிக்காவில் ஏற்படுகிறது.?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மதீனாவில் ஒரு நாளும் மற்ற ஊர்களில் ஒரு நாள் முன்னதாகவும் பிறை காணப்பட்டுள்ளது. வாகனக் கூட்டம் பற்றிய ஹதீஸ் இதற்குப் போதிய ஆதாரமாகும்.
முதலில் பிறை பார்த்தவர்கள் கணக்குப் படி ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ர் வந்து விடுகிறது. இவர்களுக்கு ஒற்றைப்படையாக அமையும் நாட்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரட்டைப்படை நாட்களாக அமையுமே? அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் பாக்கியம் கிட்டாதா?
அல்லாஹ் ஒரு பாக்கியத்தை வழங்கினால் அனைவரும் அடைந்து கொள்ள ஏற்ற வகையில் தான் அருளுவான். முஸ்லிம்கள் பரந்து விரிந்த அந்தக் காலத்தில் ஒரு பகுதியில் காணப்பட்ட பிறை மறு பகுதிக்குத் தெரியாது. இருவேறு நாட்களில் தான் நோன்பு ஆரம்பமாகியிருக்கும். அப்படியானால் யாருடைய கணக்கு ஒற்றைப்படை? ஒரு சாரார் அதை அடைந்து மறு சாரார் அடைய மாட்டார்கள் என்பது தான் பொருளா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களும் மக்களும் எப்படி லைலதுல் கத்ரை அடைந்தார்களோ அவ்வாறே நாமும் அடைய முடியும். குர்ஆன் இறங்கிய அந்த இரவு தான் லைலதுல் கத்ர். அந்த இரவே நிச்சயமாக திரும்பாது. அந்த இரவே திரும்பினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். எனவே சென்று போன அந்த இரவே திரும்பி வரும் என்று கருதக் கூடாது. அந்த இரவை மதிக்கும் வகையில் நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் போது அல்லாஹ் 1000 மாதங்களுக்கு நிகரான நன்மையைத் தருகிறான் என்பது தான் இதன் கருத்தாகும்.
அந்த நாள் திரும்பாது. அந்த இரவை மதிக்கும் வகையில் நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதே இதன் நோக்கம் என்று ஆகும் போது நாம் எதை ஒற்றைப்படை என்று கருதுகிறோமோ அந்த இரவில் அந்த நன்மைகளை இறைவன் வாரி வழங்கி விடுவான். இப்படிக் கருதும் போது இறைவனது அருளில் எந்தப் பாரபட்சமும் இல்லை.
யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வசனம் மாதத்தை அடைவதில் முன்பின்னாக இருக்கும் என்று ஒத்துக் கொள்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி முதல் பிறை என்றால் தனித்தனி ஒற்றைப்படையும் வரத் தான் செய்யும். இதை உணர்ந்தால் குழப்பம் இருக்காது.
எந்தக் கணக்கின் அடிப்படையிலும் உலகம் முழுவதும் ஒரே நாளில் தலைப்பிறை என்பது சாத்தியமில்லை என்பதை பலமுறை விளக்கியுள்ளோம்.
இவர்கள் முழுக்க முழுக்க ஆராய்ந்து எந்தச் சிக்கலும் வராது என்று நினைத்துக் கூறிய ஒரு தீர்வு தான் சுபுஹக்கு முன் தகவல் வந்தால் ஏற்க வேண்டும் என்ற கண்டுபிடிப்பு. இந்தக் கண்டுபிடிப்பு அடிப்படையிலும் கன்னியாகுமரியில் பிறை 1 ஆக இருக்கும் அதே நாளில் கோட்டாறில் பிறை 2 ஆக இருக்கும்.
இந்த இரு ஊர்களில் ஒரே நேரத்தில் ஒரே நாளில் வெவ்வேறு பிறையாக உள்ளது. இப்படியே ரமளானின் பிந்திய பத்தை இந்த இரு ஊர்களும் அடையும் போது கன்னியாகுமரியில் பிறை 20 ஆகவும். கோட்டாறில் பிறை 21 ஆகவும் இருக்கும். ஒற்றைப்படை இரவில் தான் லைலத்துல் கத்ரு என்று ஹதீஸ்களில் உள்ளது. யாருடைய ஒற்றைப்படை இரவில்? கன்னியாகுமரியின் ஒற்றைப்படை இரவிலா? அல்லது கோட்டாறின் ஒற்றைப்படை இரவிலா?
மக்காவைப் புறக்கணிக்கலாமா?
மக்காவைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் உம்முல் குரா கிராமங்களின் தாய் என்று வர்ணித்துக் கூறுகின்றான். அந்த மக்காவில் தான் இறை வணக்கத்திற்காக முதன் முதலில் கட்டப்பட்ட கஃபா அமைந்துள்ளது. ஹஜ் செய்வதற்காக உலகம் முழுவதிலிருந்தும் அங்கு தான் மக்கள் செல்ல வேண்டும். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் கஃபாவை நோக்கியே தொழ வேண்டியிருக்கிறது.
இப்படி எல்லா வகையிலும் மக்காவிற்கு அல்லாஹ் ஒரு மகத்துவத்தை வழங்கியிருக்கிறான். பூகோள ரீதியாகவும் மக்கா நடு நாயகமாக அமைந்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு மக்காவில் காணப்பட்ட பிறையை உலகம் முழுவதும் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?
மக்கா என்பது உம்முல் குரா என்பதிலும் கஃபா தான் உலகம் முழுவதற்கும் கிப்லா என்பதிலும் ஹஜ் செய்வதற்கு அங்கு தான் செல்ல வேண்டும் என்பதிலும் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஏன் கஃபாவை கிப்லாவாக ஏற்றுக் கொண்டுள்ளோம்? ஏன் ஹஜ் செய்வதற்கு கஃபாவிற்குச் செல்கிறோம்? அல்லாஹ் அவ்வாறு கட்டளையிட்டுள்ளான். அதனால் அதை ஏற்று நாம் செயல்படுத்துகிறோம்.
இதையெல்லாம் கூறிய அல்லாஹ் இவர்கள் கேட்பது போல் மக்காவில் பார்க்கப்பட்ட பிறையை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தால் அதையும் கூறியிருப்பான். உம்முடைய இறைவன் எதையும் மறப்பவன் அல்ல என்று குர்ஆன் கூறுகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த போதெல்லாம் மக்காவில் பிறை பார்த்து விட்டார்களா என்று பார்த்து தங்களுடைய நோன்பு மற்றும் பெருநாளைத் தீர்மானிக்கவில்லை.
அல்லாஹ்வோ அவனது தூதரோ கட்டளையிடாத ஒரு விஷயத்தை நாமாக ஏற்படுத்துவது அல்லாஹ்வையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் குறை கூறுவதாகும்.
இவர்கள் கூறிய சிறப்பெல்லாம் மக்காவிற்கு இருக்கிறது என்பதால் மக்காவில் கஃபாவில் அஸர் தொழும் போது தான் நாமும் அஸர் தொழ வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். நமது ஊரில் எப்போது அஸர் தொழுகையின் நேரம் வருகின்றதோ அப்போது தான் தொழ வேண்டும். இதே அளவுகோல் தான் பிறைக்கும்.
மக்காவில் பிறை தென்படும் நாள் வேறு. நமது ஊரில் பிறை தென்படும் நான் வேறு. கஃபாவை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றானோ அதற்குத்தான் பயன்படுத்த வேண்டும். மக்காவில் என்றைக்குப் பிறை பார்க்கின்றார்களோ அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வசனத்திற்கும் நாம் எடுத்துக்காட்டிய நபிமொழிகளுக்கும் மாற்றமானதாகும்.
மக்கா உலகின் மையமாக இருக்கிறது என்று கூறுவது அறிவியலுக்கு முரணானது; அடிப்படையில்லாதது. உருண்டையான பூமியில் எது மையப்பகுதி என்று யாராலும் கூற முடியாது. அப்படியே மையப்பகுதி என்று கூறுவதாக இருந்தால் பூமத்திய ரேகைப் பகுதியைச் சொல்லலாம். பூமத்திய ரேகை ஓடும் பகுதியில் ஒரு குறிப்பிட்ட ஊர் மட்டும் இல்லை. பல நாடுகள் உள்ளன. இந்த பூமத்திய ரேகை ஓடும் நாடுகளை எடுத்துப் பார்த்தால் அதிலும் மக்கா இல்லை. அப்படியே மக்கா அதில் அமைந்திருந்தாலும் அதன் காரணமாக மக்காவைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுவது ஆதாரமற்ற வாதமாகும்.
காலத்திற்கேற்ப மார்க்கம் மாறுமா?
பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்பதெல்லாம் அந்தக் கால மக்களைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகும். அறிவியல் வளர்ச்சி கண்ட இந்தக் காலத்திற்குப் பொருந்தாது அல்லவா?
அது மிகவும் ஆபத்தான வாதமாகும். இபாதத் சம்பந்தமான மார்க்கக் கட்டளையை காலத்துக்குத் தக்கவாறு மாற்றுவது என்று சொன்னால் மோசமான விளைவுகளை இது ஏற்படுத்திவிடும்.
ஜகாத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தோடு முடிந்து விட்டது என்று வியாக்கியானம் கொடுத்த கூட்டத்துடன் அபூபக்கர் (ரலி) போர் நடத்திய வரலாறு அறிவோம்.
அந்தக் காலத்தில் உள்ள அரபியருக்குக் கொழுப்பு அதிகம். அதைக் குறைக்கத் தான் நோன்பு வைக்கச் சொன்னார்கள். இப்போது அது தேவையில்லை என்று வாதிட்டால் நாம் ஏற்க மாட்டோம். பிறை விஷயத்திலும் இப்படித் தான் முடிவெடுக்க வேண்டும்.
அறிவியல் முடிவை பிறை விஷயத்தில் ஏன் ஏற்கக்கூடாது என்பதை முன்னர் விளக்கியுள்ளோம்.
பூதக்கண்ணாடியும் மூக்குக்கண்ணாடியும்
பூதக் கண்ணாடிகளால் பிறையைப் பார்த்து முடிவு செய்யலாமா?
பிறை தோன்றி விட்டாலும் நம் கண்களுக்குத் தெரியும் அளவுக்கு வளர்ந்த பிறையையே நாம் தலைப்பிறை என்கிறோம். பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது இந்தப் பிறையைத் தான். கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு இருப்பதைப் பார்க்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்க மாட்டார்கள்.
பூதக் கண்ணாடியைப் பொறுத்தவரை சாதாரண கண்ணுக்குத் தெரிவதையும் அது காட்டும். சாதாரண கண்ணுக்குத் தெரியாததையும் அது காட்டும். சாதாரணக் கண்ணுக்குத் தெரியாத சிறிய அளவிலான பிறையையும் காட்டும்.
கண்ணுக்குத் தெரியாத அளவில் உள்ள பிறையைப் பூதக் கண்ணாடியால் பார்த்து முடிவு செய்யக் கூடாது. கண்ணுக்குத் தெரியாத பிறை தலைப்பிறையைத் தீர்மானிக்க உதாவது.
சாதாரணக் கண்களால் பார்க்கும் அளவுக்கு வளர்ந்த பிறையைப் பூதக்கண்ணாடியால் பார்க்கலாமா? என்றால் பார்ப்பதில் தவறு இல்லை.
ஆனால் பூதக் கண்ணாடியிலிருந்து கண்களை விலக்கி நேரடியாகப் பார்த்து நிருபிக்க வேண்டும். பூதக் கண்ணாடியால் தெரிந்தது சாதாரணக் கண்களுக்குத் தெரியாவிட்டால் பார்க்கும் அளவுக்குப் பிறை வளரவில்லை என்று பொருள்.
பூதக் கண்ணாடியால் பிறை இருப்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். அவ்வாறு கண்டுபிடித்த பின் அதே இடத்தில் சாதாரணக் கண்களால் பார்க்கலாம். இதற்கு மட்டும் தான் பூதக் கண்ணாடி உதவும். கண்ணாடி அணிந்து பிறை பார்த்தவரின் சாட்சியத்தை ஏற்கலாமா? என்று குதர்க்கமாகக் கேட்கிறார்கள்.
ஏற்கனவே எழுதப்பட்டவற்றிலேயே இதற்கான விளக்கமும் அடங்கியுள்ளது.
ஒரு பொருளை சாதாரணக் கண்களால் பார்க்கும் போது எப்படி இருக்குமோ அப்படிப் பார்ப்பதற்குத் தான் கண்ணாடி அணிகிறோம். சிறியதைப் பெரியதாகக் காட்டவோ தொலைவில் உள்ளதை அருகில் பார்க்கவோ யாரும் கண்ணாடி அணிவதில்லை. இயல்பான பார்வையைப் பெறுவது தான் கண்ணாடியின் தன்மை. பார்வைக் குறைவு ஏற்பட்டவர் கண்ணாடி அணிந்து பார்ப்பதும் பார்வைக் குறைவு அற்றவர் கண்ணாடியில்லாமல் பார்ப்பதும் சமமானவை தான் இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இயல்பான பார்வையின் தன்மையை அடைவதற்காக இல்லாமல் சிறியதைப் பெரிதாகக் காட்டும் கண்ணாடியையோ தூரத்தில் உள்ளதை அருகில் காட்டும் கண்ணாடியையோ அணிந்து பிறை பார்த்தால் அதை ஏற்க முடியாது.