தொழுது கொண்டிருக்கும் போது இகாமத் சொல்லப்பட்டால்?

தொழுது கொண்டிருக்கும் போது, இகாமத் சொல்லப்பட்டால், தொழுகையை விட்டு விட்டு, ஜமாஅத்தில் சேருவதா? அல்லது தொழுகையை முடித்து விட்டு ஜமாஅத்தில் சேருவதா?

அர்ஷாத்-கத்தார்

முன்னர் எழுதிய பதில் இன்று திருத்தி வெளியிடப்படுகிறது

பதில் :

கடமையான தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் எந்தத் தொழுகையும் இல்லை என்று பின்வரும் செய்தி கூறுகின்றது.

صحيح مسلم

1679 – وَحَدَّثَنِى يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِىُّ حَدَّثَنَا رَوْحٌ حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ قَالَ سَمِعْتُ عَطَاءَ بْنَ يَسَارٍ يَقُولُ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ الْمَكْتُوبَةُ ».

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான அந்தத் தொழுகையைத் தவிர வேறு எந்தத் தொழுகையில்லை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்

இந்த ஹதீஸில் இகாமத் சொல்லப்பட்ட பின் வேறு எந்தத் தொழுகையும் இல்லை என்ற வாசகத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இது புதிதாக தொழுகையை துவக்கக் கூடாது என்ற கருத்தைத் தருவதுடன் துவக்கி இருந்தாலும் அதை விட்டுவிட வேண்டும் என்பதையும் உள்ளடக்கியதாகும். எந்தத் தொழுகையும் துவக்கக் கூடாது என்று சொல்லாமல் எந்தத் தொழுகையும் இல்லை என்று நபிகள் கூறியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இகாமத் சொல்லப்படும் முன்னரே நாம் ஏதேனும் ஒரு தொழுகையில் ஈடுபட்டிருந்தால் அந்தத் தொழுகையை இடையில் முறிப்பதைப் பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை. நாம் ஈடுபட்டிருந்த தொழுகையை முடித்து விட்டு ஜமாஅத் தொழுகையில் சேர்ந்து கொள்ள வேண்டும். என்று முன்னர் நாம் கூறி இருந்தோம்.அதற்கு பின் வரும் ஹதீஸை ஆதாரமாக காட்டி இருந்தோம்.

ஏனெனில் தொழுகையை தக்பீர் கொண்டு ஆரம்பித்து ஸலாம் கொண்டு முடிக்க வேண்டும் என்பது நபி மொழியாகும்.

سنن الترمذي

3 – حَدَّثَنَا قُتَيْبَةُ، وَهَنَّادٌ، وَمَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالُوا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»

தொழுகையின் திறவுகோல் உளூவாகும். அதன் உள் நுழைதல் தக்பீர் ஆகும். வெளியேறுதல் ஸலாம் கொடுப்பதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : திர்மிதி 3

முறைப்படி தொழுகையை முடிக்க எண்ணினால் அந்தத் தொழுகையின் நன்மை கிடைக்க வேண்டுமானால் ஸலாம் கூறி முழுமைப் படுத்திய பின் தான் முடிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அதற்கான கூலி கிடைக்காது என்ற கருத்து தான் இதில் கிடைக்கும். தக்க காரணத்துடன் மார்க்க ஆதார அடிப்படையில் இடையில் முறிக்கக் கூடாது என்ற கருத்தை இது தராது.

இகாமத் சொல்லப்பட்ட பின்னர் இடையில் முறித்து விட்டு ஜமாஅத்தில் ஒருவர் சேர்ந்து கொண்டால் முறித்த தொழுகையின் நன்மை அவருக்குக் கிடைக்காது. முழுமைப்படுத்தாமல் முறித்து விட்டார் என்று தான் நாம் கருத வேண்டும். இப்படி முறிப்பதற்கு இகாமத்துக்குப் பின் எந்த தொழுகையும் இல்லை என்ற நபியின் கட்டளை காரணமாக உள்ளதால் முறித்த குற்றம் இவரை சேராது

எந்தத் தொழுகையும் என்பதில் உள்ள அழுத்ததை நாம் கவனிக்காமல் முன்னர் தவறாக கூறிவிட்டோம் என்பதை அறிவிக்கிறோம்.