பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்
பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும்.
திருக்குர்ஆன் 4:15, 24:4, 24:11-17 ஆகிய வசனங்களில் இதைக் காணலாம்.
கொடுக்கல் வாங்கல் மற்றும் மனிதர்களுக்கிடையே உள்ள பிரச்சனைகளில் இரு ஆண்கள் அல்லது ஒரு ஆண் இரு பெண்கள் சாட்சியத்தை ஏற்க வேண்டும் என்று அல்லாஹ் வழிகாட்டுகிறார்ன். பார்க்க : திருக்குர்ஆன் 2:283
மனிதர்களுக்கிடையிலான பிரச்சனையாக இல்லாமல் மார்க்க சம்மந்தமான பிரச்சனையாக இருந்தால் ஒரே ஒருவர் சாட்சி கூறினால் ஏற்க வேண்டும்.
ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் நான் பாலூட்டினேன் என்று ஒரு பெண் சட்சியம் கூறியதை ஏற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பு அளித்துள்ளார்கள். (பார்க்க : புகாரி 88)
பிறை பார்த்ததாக ஒருவர் சாட்சி சொன்னதை ஏற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் நோன்பு நோற்று மற்றவர்களையும் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள்.
*سنن الدارمي
1733 – حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ سَالِمٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «تَرَاءَى النَّاسُ الْهِلَالَ، فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي رَأَيْتُهُ، فَصَامَ وَأَمَرَ النَّاسَ بِالصِّيَامِ»
*மக்களெல்லாம் பிறை பார்க்க முயன்றனர். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நான் பிறை பார்த்தேன் என்று தெரிவித்தேன். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் நோன்பு நோற்று மக்களுக்கும் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல்கள் : தாரிமி, பைஹகீ, ஹாகிம், இப்னு ஹிப்பான், தப்ரானி கபீர், தப்ரானி அவ்ஸத்
இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகும்.
பிறை குறித்து இரு சாட்சிகள் சாட்சி சொன்னால் ஏற்றுக் கொள்ளூங்கள் என்றும் ஒரு ஹதீஸ் உள்ளது.
سنن النسائي
2116 – أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ شَبِيبٍ أَبُو عُثْمَانَ، وَكَانَ شَيْخًا صَالِحًا بِطَرَسُوسَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ حُسَيْنِ بْنِ الْحَارِثِ الْجَدَلِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ خَطَبَ النَّاسَ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ، فَقَالَ: أَلَا إِنِّي جَالَسْتُ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَاءَلْتُهُمْ، وَإِنَّهُمْ حَدَّثُونِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، وَانْسُكُوا لَهَا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا ثَلَاثِينَ، فَإِنْ شَهِدَ شَاهِدَانِ فَصُومُوا، وَأَفْطِرُوا»”*
பிறை பார்த்து நோன்பு வைத்து, பிறை பார்த்து நோன்பை விடுங்கள். அதன் படி மார்க்கக் கிரியைகளை அமைத்துக் கொள்ளுங்கள். இரண்டு சாட்சிகள் சாட்சி கூறினால் நோன்பு வையுஙகள். நோன்பை விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் :நஸாயீ
இரண்டு சாட்சிகள் சாட்சி கூறினால் ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதும், ஒரு சாட்சியின் சாட்சியத்தை ஏற்று முடிவு செய்தார்கள் என்பதும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் தான்.
ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுக்கக் கூடாது.
இரண்டு சாட்சிகள் சிறப்பு; ஒரு சாட்சி போதுமானது என்று தான் இது போல் அமைந்த எல்லா ஹதீஸ்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே மார்க்க விஷயத்தில் ஒரே ஒரு சாட்சி இருந்தாலே போதுமாகும்.
பிறை சாட்சியத்துக்கு அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டவில்லை. சாட்சி சொல்பவர் முஸ்லிமாக இருந்தால் போதும்.
ஆனால் அவர்கள் எந்த நேரத்தில் பார்த்ததாகக் கூறினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பொருள் கொள்ளக் கூடாது.
இரவு பத்து மணிக்கு தலைப்பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினால் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அந்த நேரத்தில் தலைப்பிறையைப் பார்க்க முடியாது.
நண்பகலில் தலைப்பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதையும் ஏற்க முடியாது. ஏனெனில் நண்பகலில் தலைப் பிறையைப் பார்க்க முடியாது.
பிறை 25ல் தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அது தலைப்பிறை பார்ப்பதற்குரிய நாள் அல்ல.
இது போல் தான் அமாவாசையில் பிறை பார்த்ததாகக் கூறுவதையும் ஏற்க முடியாது. அமாவாசையன்று எந்தக் கண்ணுக்கும் பிறை தென்படாது.
வேண்டுமென்று பொய் கூறாத சாட்சிகளாக இருந்தாலும் கண்கள் தவறு செய்வதுண்டு சிறிய மேகத்துண்டு கூட பிறையாகத் தோற்றமளிக்க வாய்ப்பு உள்ளது. நாம் வானத்தில் ஓரிடத்தை உற்று நோக்கும் போது அந்த இடத்தில் ஒரு நட்சத்திரம் இருப்பது போல் தெரியும் உடனே மறைந்து விடும். ஆனால் உண்மையில் அந்த இடத்தில் நட்சத்திரம் எதுவும் இருக்காது. இந்தத் தவறு பிறை விஷயத்திலும் நடக்க வாய்ப்புள்ளது.
ஒருவரை விஷம் வைத்துக் கொடுத்து கொன்றதாக நம்பகமானவர்கள் சாட்சியம் கூறுகிறார்கள். ஆனால் பிரேதப் பரிசோதனையில் விஷம் கொடுக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் சாட்சிகள் கூறியதை யாரும் ஏற்க மாட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாட்சியத்தை ஏற்றுள்ளார்களே என்று கேட்கலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாதத்தின் முப்பதாம் இரவில் பிறை பார்த்ததாகக் கூறப்பட்ட சாட்சியத்தைத் தான் ஏற்றார்கள். 27, 28 இரவுகளில் பிறை பார்த்தோம் என்று கூறிய எந்த சாட்சியத்தையும் ஏற்றதாக எந்த ஆதாரமும் இல்லை.
எனவே நமது ஊரில் பிறை பார்த்த கணக்குப்படி முப்பதாம் இரவில் யாராவது பிறை பார்த்ததாக சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பிறை பார்க்கச் சாத்தியமற்ற நாளில் பிறை பார்த்ததாகக் கூறுவதை ஏற்கக் கூடாது. சாட்சிகள் கூறி விட்டதால் இதை ஏற்கத் தான் செய்வோம் என்று யாரேனும் பிடிவாதம் பிடித்தால் எந்தப் பகுதியில் அந்த சாட்சிகள் பார்த்தார்களோ அந்தப் பகுதிக்கு மட்டும் அது பொருந்தும். எல்லாப் பகுதிக்கும் பொருந்தாது என்பதை ஏற்கனவே தக்க காரணங்களுடன் நிரூபித்துள்ளோம்.