மழைக்காலமும் ஜமாஅத் தொழுகையும்

கடுமையான மழை நேரங்களில் பள்ளிவாசலுக்கு வராமல் கடமையான தொழுகைகளை வீடுகளிலேயே தொழுவதற்கு மார்க்கம் அனுமதிக்கின்றது.

அது போன்ற சூழ்நிலையில் பாங்கின் சில வாசகங்களை மாற்றிச் சொல்ல வேண்டும்.

ஹய்ய அலஸ்ஸலாஹ், மற்றும் ஹய்ய அலல் ஃபலாஹ் என்ற வாக்கியங்களைக் கூறாமல் அதற்கு பகரமாக  “ஸல்லூ ஃபீ புயூதிகும்” என்று இருமுறை கூற வேண்டும் என்று மார்க்கம் வழிகாட்டுகின்றது.

இதற்குரிய ஆதாரம்

صحيح البخاري

901 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الحَمِيدِ، صَاحِبُ الزِّيَادِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الحَارِثِ ابْنُ عَمِّ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ: ابْنُ عَبَّاسٍ لِمُؤَذِّنِهِ فِي يَوْمٍ مَطِيرٍ: إِذَا قُلْتَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَلاَ تَقُلْ حَيَّ عَلَى الصَّلاَةِ، قُلْ: «صَلُّوا فِي بُيُوتِكُمْ»، فَكَأَنَّ النَّاسَ اسْتَنْكَرُوا، قَالَ: فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي، إِنَّ الجُمْعَةَ عَزْمَةٌ وَإِنِّي كَرِهْتُ أَنْ أُحْرِجَكُمْ فَتَمْشُونَ فِي الطِّينِ وَالدَّحَضِ

அப்துல்லாஹ் இப்னு அல் ஹாரிஸ் அறிவித்தார்:

‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்’ என்று கூறிய பிறகு ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்பதைக் கூறாமல் (ஸல்லூ ஃபீ புயூதிகும்)  உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று கூறுவீராக என்று பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். (இவ்வாறு கூறியதை) மக்கள் வெறுப்பது போல் இருந்தபோது ‘என்னை விட மிகவும் சிறந்தவ(ரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்’ என்று கூறினார்கள். நிச்சயமாக ஜும்ஆ அவசியமானது தான்; எனினும், நீங்கள் சேற்றிலும், சகதியிலும் நடந்து வந்து அதனால் உங்களுக்குச் சிரமம் தருவதை நான் விரும்பவில்லை’ என்றும் குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 901

ஹய்ய அலஸ்ஸலாஹ் (தொழுகையின் பக்கம் வாருங்கள்) ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்)  என்ற வாக்கியத்தைக் கூறாமல் அதற்கு பகரமாக ஸல்லூ ஃபீ புயூதிகும் (உங்களின் வீடுகளில் தொழுது கொள்ளுங்கள்) என்ற வாக்கியத்தைக் கூறவேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம்!

இந்த ஹதீஸில் ஸல்லூ ஃபீ புயூதிகும் எனக் கூற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இதற்குப் பகரமாக வேறு சில சொற்களைக் கூறுவதற்கும் ஆதாரம் உள்ளது.

صَلُّوا فِي رِحَالِكُمْ

ஸல்லூ ஃபீ ரிஹாலிக்கும் (அஹ்மத் 23215)

أَلَا صَلُّوا فِي رِحَالِكُمْ

அலா ஸல்லூ ஃபீ ரிஹாலிக்கும் (முஸ்லிம் 1241)

الصَّلَاةُ فِي الرِّحَالِ

அஸ்ஸலாத்து ஃபிர்ரிஹால்  (புகாரி 616)

أَلَا صَلُّوا فِي الرِّحَالِ

அலா ஸல்லூ ஃபிர் ரிஹால் (புகாரி 632)

இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கூற வேண்டுமா? அல்லது அல்லது ஸல்லூ ஃபீ புயூதிகும் எனக் கூற வேண்டுமா?

பீ புயூதிகும் என்பதை ஊர்களில் சொல்லும் பாங்கில் பயன்படுத்த வேண்டும். ஃபீ புயூதிகும் என்றால் வீடுகளில் என்று பொருள்.

ரிஹால் என்ற  சொல் இடம்பெறும் வாசகங்களை பயணத்தில் இருக்கும் போது சொல்ல வேண்டும். ரிஹால் என்றால் இருப்பிடங்கள் என்று பொருள். இது வீட்டையும், வீடு அல்லாமல் பயணத்தின் போது அமைக்கும் கூடாரங்களையும் குறிக்கும். ரிஹால் என்ற சொல் இடம் பெற்ற அதிகமான அறிவிப்புக்கள் பயணத்தின் போது சொல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வீடுகளில் என்ற அறிவிப்பு பயணத்தின் போது சொல்லப்பட்டதாக இருக்க முடியாது. பயணத்தில் அமைக்கும் கூடாரங்களை வீடுகள் என்று சொல்வதில்லை. எனவே தான் ரிஹால் என்ற இரு பொருள் தரும் அறிவிப்புக்களை விட  ஃபீ புயூதிகும் என்ற சொல் தான் உள்ளூரில் சொல்வதற்குப் பொருத்தமானது.

ஹய்ய அலஸ்ஸலா என்பதையும் சொல்லி விட்டு மேற்கண்ட வாசகங்களைக் கூற வேண்டும் என சிலர் கூறியுள்ளனர். இது தவறாகும். ஹய்ய லஸ்ஸலா என்பதற்குப் பதிலாகத் தான் மேற்கண்ட சொற்களைக் கூற வேண்டும்.

ஏனெனில் ஹய்ய அலஸ்ஸலாஹ் என்றால் தொழுகையின் பக்கம் வாருங்கள் என்று பொருள் ஆகும். இதையும் கூறி விட்டு தொழுகைக்கு வர வேண்டாம் வீட்டில் தொழுங்கள் என்றும் கூறினால் இரண்டும் முரண்படும்.

வாருங்கள்! ஆனால் வராதீர்கள் என்ற குழப்பமான நிலையைத் தவிர்க்கவே ஹய்ய அலஸ்ஸலாஹ் என்பதை தவிர்க்க சொல்லி இருக்கிறார்கள் என்பது மேலோட்டமாகப் பார்த்தாலே தெரியும்.

மழைக்காலங்களில் பள்ளிவாசலுக்கு வராமல் வீட்டிலே தொழுது கொள்வது சலுகையா? கட்டாயக் கடமையா? இதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மழைக்காலங்களில் பள்ளிவாசலில் வழக்கம் போல் தொழுகை நடத்த வேண்டும். வீடுகளில் தொழலாம் என்ற சலுகையைப் பயன்படுத்த விரும்புவோர் அவ்வாறு பயன்படுத்தலாம். மழையைச் சிரமமாகக் கருதாதவர்கள் விரும்பினால் பள்ளிவாசலுக்கு வரலாம் என்பதே சரியான கருத்தாகும்.

صحيح البخاري

1013 – حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: أَخْبَرَنَا أَبُو ضَمْرَةَ أَنَسُ بْنُ عِيَاضٍ، قَالَ: حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَذْكُرُ أَنَّ رَجُلًا دَخَلَ يَوْمَ الجُمُعَةِ مِنْ بَابٍ كَانَ وِجَاهَ المِنْبَرِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ: هَلَكَتِ المَوَاشِي، وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُغِيثُنَا، قَالَ: فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ، فَقَالَ: «اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا» قَالَ أَنَسُ: وَلاَ وَاللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ مِنْ سَحَابٍ، وَلاَ قَزَعَةً وَلاَ شَيْئًا وَمَا بَيْنَنَا وَبَيْنَ سَلْعٍ مِنْ بَيْتٍ، وَلاَ دَارٍ قَالَ: فَطَلَعَتْ مِنْ وَرَائِهِ سَحَابَةٌ مِثْلُ التُّرْسِ، فَلَمَّا تَوَسَّطَتِ السَّمَاءَ، انْتَشَرَتْ ثُمَّ أَمْطَرَتْ، قَالَ: وَاللَّهِ مَا رَأَيْنَا الشَّمْسَ سِتًّا، ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنْ ذَلِكَ البَابِ فِي الجُمُعَةِ المُقْبِلَةِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَهُ قَائِمًا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ: هَلَكَتِ الأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُمْسِكْهَا، قَالَ: فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ حَوَالَيْنَا، وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالجِبَالِ وَالآجَامِ وَالظِّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ» قَالَ: فَانْقَطَعَتْ، وَخَرَجْنَا نَمْشِي فِي الشَّمْسِ قَالَ شَرِيكٌ: فَسَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ: أَهُوَ الرَّجُلُ الأَوَّلُ؟ قَالَ: «لاَ أَدْرِي»

1013 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது மேடைக்கு எதிர்த்திசையிலிருந்த வாசல் வழியாக ஒரு மனிதர் வந்தார். அவர் நின்று கொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! (பஞ்சத்தால்) கால்நடைகள் அழிந்துவிட்டன; போக்குவரத்து நின்றுவிட்டது. அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் எங்களுக்கு மழை பொழியச் செய்வான் என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! வானத்தில் மேகக் கூட்டம் எதையும் நாங்கள் காணவில்லை; தனி மேகத்தையோ (மழைக்கான அறிகுறிகள்) எதையுமோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (மதீனாவிலுள்ள) சல்உ மலைக்குமிடையே எந்த வீடும் கட்டடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியே இருந்தது.) அப்போது அம்மலைக்குப் பின்னாலிருந்து கேடயம் போன்று (வட்டவடிவில்) ஒரு மேகம் தோன்றியது. அது நடுவானில் மையம் கொண்டு சிதறியது. பிறகு மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஆறு (ஏழு), நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜுமுஆவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும் போது ஒரு மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். (வந்தவர்) நின்றவாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! (தொடர்ந்து பெய்த பெருமழையால் எங்கள் கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் தடைபட்டு விட்டது. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்! என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, இறைவா! எங்கள் சுற்றுப்புறங்கள் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா! குன்றுகள், மலைகள் ஓடைகள் விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) என்று பிரார்த்தித்தார்கள். உடனே (மதீனாவில்) மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.

நூல் : புகாரி 1013

இதன் அறிவிப்பாளரான ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநமிர் அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், இ(ரண்டாவதாக வ)ந்த மனிதர் முதலில் வந்தவர்தாமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், எனக்குத் தெரிய வில்லை’ என்று பதிலளித்தார்கள்.

صحيح البخاري

933 – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، قَالَ: حَدَّثَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَمْرٍو الأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: أَصَابَتِ النَّاسَ سَنَةٌ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فِي يَوْمِ جُمُعَةٍ قَامَ أَعْرَابِيٌّ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ: هَلَكَ المَالُ وَجَاعَ العِيَالُ، فَادْعُ اللَّهَ لَنَا، فَرَفَعَ يَدَيْهِ وَمَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا وَضَعَهَا حَتَّى ثَارَ السَّحَابُ أَمْثَالَ الجِبَالِ، ثُمَّ لَمْ يَنْزِلْ عَنْ مِنْبَرِهِ حَتَّى رَأَيْتُ المَطَرَ يَتَحَادَرُ عَلَى لِحْيَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمُطِرْنَا يَوْمَنَا ذَلِكَ، وَمِنَ الغَدِ وَبَعْدَ الغَدِ، وَالَّذِي يَلِيهِ، حَتَّى الجُمُعَةِ الأُخْرَى، وَقَامَ ذَلِكَ الأَعْرَابِيُّ – أَوْ قَالَ: غَيْرُهُ – فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، تَهَدَّمَ البِنَاءُ وَغَرِقَ المَالُ، فَادْعُ اللَّهَ لَنَا، فَرَفَعَ يَدَيْهِ فَقَالَ: «اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا» فَمَا يُشِيرُ بِيَدِهِ إِلَى نَاحِيَةٍ مِنَ السَّحَابِ إِلَّا انْفَرَجَتْ، وَصَارَتِ المَدِينَةُ مِثْلَ الجَوْبَةِ، وَسَالَ الوَادِي قَنَاةُ شَهْرًا، وَلَمْ يَجِئْ أَحَدٌ مِنْ نَاحِيَةٍ إِلَّا حَدَّثَ بِالْجَوْدِ

933 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் ஒருமுறை பஞ்சம் ஏற்பட்டது. ஒரு ஜுமுஆ நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு கிராமவாசி எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்து விட்டன; குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே, எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் கைகளை ஏந்தினார்கள்.- அப்போது எந்த மழைமேகத்தையும் நாங்கள் வானத்தில் காணவில்லை- என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கையை கீழே விடுவதற்கு முன்பாக மலைகளைப் போன்ற மேகங்கள் பரவத் தொடங்கின. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவு மேடையை விட்டும் இறங்கியிருக்கவில்லை. மழை பெய்து அவர்களது தாடியில் வழிந்ததை நான் பார்த்தேன். எங்களுக்கு அன்றைய தினமும் மறுதினமும் அதற்கடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் அடுத்த ஜுமுஆ வரையிலும் மழை கிடைத்தது.அதே கிராமவாசி’ அல்லது வேறொருவர்’ எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! கட்டடங்கள் இடிந்து கொண்டிருக்கின்றன; செல்வங்கள் வெள்ள நீரில் மூழ்குகின்றன. எனவே, எங்களுக்கு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். அப்போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தி, இறைவா! எங்களைச் சுற்றிலும் மழையைப் பொழிவாயாக! எங்களுக்கெதிராக மழை பொழியச் செய்யாதே! என்று பிரார்த்தித்தார்கள். மேகத்தின் எந்தப் பகுதியை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சைகை செய்தார்களோ அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா(வைச் சூழ்ந்திருந்த மேகம் விலகியதால் அது) பாதாளம் போன்று மாறிவிட்டிருந்தது. கனாத்’ ஓடையில் ஒரு மாதம் தண்ணீர் ஓடியது. எந்தப் பகுதியிலிருந்து யார் வந்தாலும் இந்த அடை மழை பற்றிப் பேசாமால் இருக்கவில்லை.

நூல் : புகாரி 933

ஒரு வாரம் தொடர் மழை பொழிந்தும் ஜும்மாவுக்கு மக்கள் வந்துள்ளனர்; வந்தவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும் ஆதொழுகை நடத்தியுள்ளனர் என்பதை இந்த ஹதீஸ்களில் இருந்து அறிகிறோம். எனவே மழைக்காலத்தில் பள்ளிவாசலுக்கு வர விரும்பியவர் வரலாம் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.

மேலும் வீடுகளில் தொழுது கொள்வது கட்டாயமானதல்ல என்பதைப் பின்வரும் ஹதீஸில் இருந்தும் அறியலாம்.

صحيح مسلم

25 – (698) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَمُطِرْنَا، فَقَالَ: «لِيُصَلِّ مَنْ شَاءَ مِنْكُمْ فِي رَحْلِهِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் புறப்பட்ட பொது மழை பெய்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களில் விரும்பியவர் தமது கூடாரத்தில் தொழுது கொள்ளலாம் என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

எனவே பள்ளிவாசலில் தொழுகையே இல்லாமல் பூட்டிப்போடக் கூடாது. விரும்பி வரக்கூடிய மக்களுக்கு தொழுகை நடத்தப்பட வேண்டும்.