நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்டபோது

(1986ல் அந்நஜாத் பத்திரிகையில் பீஜே ஆசிரியரக இருந்த போது ஜூலை இதழில் எழுதிய கட்டுரை.)

இப்ராஹீம் (அலை) அவர்களின் இறையச்சமும், தியாகமும் , வீரமும் நிறைந்த வரலாற்றை நாம் அறிவோம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் சென்ற நபிமார்களில் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முதலிடம் உண்டு என்பதையும், நாம் தெரிந்திருக்கிறோம்! மிகபெரும் கொடுங்கோல் மன்னனுக்கு முன்னிலையில் கொஞ்சமும் அஞ்சாமல் சத்தியத்தை ஒரிறைக் கொள்கையை துணிவுடன் எடுத்துச் சொன்னார்கள்.

அதற்காக எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள்! அந்தக் கொடுமைகளுக்கெல்லாம் சிகரமாக மிகப்பெரும் நெருப்புக் குண்டத்தை வளர்த்து அதில் இப்ராஹீம் (அலை) அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்! அல்லாஹ் தன் பேராற்றலால், அந்த மாபெரும் நெருப்பைக் குளிரச்செய்து அவர்களைக் காப்பாற்றினான் . இந்த அற்புத வரலாற்றை திருக்குர்ஆன் மிகவும் அழகாக நமக்கு எடுத்துரைக்கின்றது.

இந்த உண்மை வரலாற்றுடன் பொய்யான கதை ஒன்றையும் சிலர் கலந்து விட்டிருக்கின்றனர். அந்தக் கற்பனைக் கதை மக்கள் மன்றங்களில் அடிக்கடி சொல்லப்பட்டும் வருகின்றது.

குர்ஆனும், நபி வழியும் போதிக்கின்ற தத்துவத்திற்கு அந்தக் கதை முரண்படுவதாலும், அந்தக்கதையை வைத்து சிலர் தவறான வழியை நேர்வழிபோல் காட்ட முயற்சிப்பதாலும் அதனைத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எற்படுகின்றது. முதலில் அந்தத் தவறான கதை என்னவென்று பார்ப்போம்! பிறகு அது எப்படித் தவறாக உள்ளது என்பதை விளக்குவோம்!

இதுதான் கதை:

இப்ராஹீம் (அலை) நெருப்புக் குண்டத்தில் எறியப்படுவதற்கு சிறிது முன்பு ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இப்ராஹீம் (அலை) அவர்களுடன் பின் வருமாறு உரையாடினார்களாம்!

ஜிப்ரீல் (அலை) :- இப்ராஹீமே ! இந்த இக்கட்டான நேரத்தில் உமக்கு எதுவும் தேவையா ?

இப்ராஹீம் (அலை) :- உம்மிடம் எனக்கு எ ந்தத் தேவையும் கிடையாது!

ஜிப்ரீல் (அலை) :- என்னிடம் உமக்குத் தேவை எதுவும் இல்லையானால் உம்மைப் படைத்த இறைவனிடம் இந்தத் துன்பத்திலிருந்து விடுவிக்கும்படிக் கேளும்!

இப்ராஹீம் (அலை):- இறைவனிடம் நான் என் துன்பத்திலிருந்து விடு விக்கும்படி கேட்க வேண்டியதில்லை. நான் மிகப்பெரும் ஆபத்தில் சிக்கிக் கொண்டிருப்பது அந்த இறைவனுக்குத் தெரியாதா என்ன? நான் எதற்காக அவனிடம் கேட்க வேண்டும்?

இப்படி ஒரு உரையாடல் நடந்ததாகத் தான் சிலர் கற்பனை செய்துள்ளனர் .

இதனை அல்லாஹ் தன் திருக்குர் ஆனில் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. சிலர் தங்களின் சொந்தக் கற்பனையால் உருவாக்கியது தான் இந்த கதை.

பிரார்த்தனையின் நோக்கம்:

அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன் என்பதில் ஜயமில்லை. அல்லாஹ்வுக்கு எல்லாம் தெரியும் என்பதற்காக நாம் நமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்காமலிருக்க அனுமதி உண்டா? மிகச் சிறந்த நபியாகிய இப்ராஹீம் (அலை) அவர்கள் இப்படிச் சொல்லி இருப்பார்களா? என்று ஆராயும் போது நிச்சயம் அப்படி சொல்லி இருக்க முடியாது என்ற முடிவுக்குத்தான் வரமுடியும்.

ஏனெனில், இப்ராஹீம் (அலை) அவர்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கள் தேவைகளை அல்லாஹ்விடம் முறையிட்டிருக்கிறார்கள் என்று பிரார்த்தனையை அவர்கள் விடவில்லை.

பிரார்த்தனை என்பது நம்முடைய அடிமைத்தனத்தையும், அல்லாஹ்வின் மகத்துவத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் மிகப்பெரும் வணக்கம் என்பதை இப்ராஹீம் (அலை) நன்றாகாவே தெரிந்திருந்தார்கள். அவர்கள், அல்லாஹ்விடம் கேட்ட பல துஆக்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான். அவற்றில் சிலவற்றைக் கீழே காண்போம்.

அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன் (என்றனர்.)  எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன் (என்றனர்.) எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன் (என்றனர்.) 

 அல்குர் ஆன் 2 :127 -129

இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக! என்று இப்ராஹீம் கூறிய போது, (என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்; பின்னர் அவர்களை நரக வேதனையில் தள்ளுவேன்; சேருமிடத்தில் அது மிகவும் கெட்டது என்று அவன் கூறினான்.

அல்குர்ஆன் 2 :126

என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக!பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக!இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக!என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழி தவறியவராக இருக்கிறார். (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில்1 என்னை இழிவுபடுத்தி விடாதே!

அல்குர்ஆன் 26 : 83 -87

இறைவனே! எனக்கு நன் மகனைத் தந்தருள்வாயாக!

அல்குர்ஆன் 37 : 100

எங்கள் இறைவா ! (உன்னை) மறுப்பவர்களுக்கு எ ங்களை சோதனைப் பொருளாக ஆக்கி விடாதே! எங்கள் இறைவா! எ ங்களுக்கு மன்னிப்பும் வழ ங்ககுவாயாக!

 அல்குர்ஆன் 60 :5

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!

 அல்குர்ஆன் 14 :37

மேலே கூறப்பட்ட அனைத்தும் இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தைனைகள். அல்லாஹ்வுக்கு எல்லாம் தெரியும் என்று அவர்கள் மேற்கூறிய ச ந்தர்ப்பங்களில் பிரார்த்தனை செய்யாமல் இருக்கவில்லை. மாறாக தன்னுடைய இயலாமையை, பலவீனத்தை வெளிப்படுத்திக் காட்டுவதற்காக தன்னுடைய பல தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டிருக்கிறார்கள். தன்னுடைய தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டு விட்டு பின்வருமாறு அவர்கள் கூறவும் செய்கிறார்கள்.

எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்துபவற்றையும் நீ அறிவாய். பூமியிலோ, வானத்திலோ அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது.

அல்குர்ஆன் 14: 38

இறைவனுக்குத் தன்னுடைய தேவைகள் தெரியும் என்பதை ஒப்புக் கொள்ளும் அதே நேரத்தில் துஆ கேட்க அவர்கள் மறுக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

அப்படிப்பட்ட இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகப்பெரும் இக்கட்டில் மாட்டிக் கொண்ட நேரத்தில் எப்படி துஆச் செய்ய மறுத்திருப்பார்கள்? அதுவும் மிகப்பெரும் மலக்கு ஒருவர் நினைவூட்டிய பின்னர் எப்படி மறுத்திருப்பார்கள்? இதிலிருந்தே அ ந்த உரையாடல் கற்பனையானது என்பதை தெரிய முடியும்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் மட்டுமல்ல, இன்னும் பல நபிமார்கள் தங்களுக்கு கஷ்டங்கள் ஏற்பட்டபோது இறைவனுக்குத் தெரியும் என்று அவர்கள் அல்லாஹ்விடம் முறையிடாமல் இருந்ததில்லை. தங்களுக்கு ஏற்பட்ட தேவைகளை அல்லாஹ்விடம் கேட்காமல் இரு ந்ததிலை.

ஆதம் (அலை) அவர்கள் தவறு செய்தபின், அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ததை குர்ஆன் 7 :22 வசனத்திலும்,

அய்யூப் (அலை) அவர்களுக்கு எற்பட்ட துன்பத்தை அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்டதை 21 :83 வசனத்திலும்,

யூனுஸ் (அலை) தாம் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரியதை 21 :87 வசனத்திலும்,

ஈஸா (அலை) தன்னுடைய தேவையை அல்லாஹ்விடம் கேட்டதை 5:114 வசனத்திலும்,

ஜக்கரியா (அலை) தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று துஆ செய்ததை 3:38 வசனத்திலும்,

நூஹ் (அலை) தம் சமுதாயத்திற்கு எதிராக துஆ செய்ததை 21:76 வசனத்திலும்,

யஃகூப் (அலை) தன் மகனைப் பிரிந்த வேதனையை அல்லாஹ்விடம் முறையிட்டதாக 12:86 வசனத்திலும்,

மிகப்பெரும் ஆட்சி தனக்கு வேண்டும் என்று சுலைமான் (அலை) அவர்கள் துஆ செய்ததாக 38:35 வசனத்திலும்,

லூத் (அலை) அவர்கள் தன் சமுதாயத்தினரின் தீய செயல்களிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்கும்படி துஆ செய்ததை 26:169 வசனத்திலும்

ஷுஐபு (அலை) அவர்கள் தன் சமுதாயத்திற்கு எதிராகச் செய்த பிரார்த்தனையை 7:89 வசனத்திலும்,

மூஸா (அலை) தனக்கு விரிவான ஞானத்தையும், இன்னும் பல தேவைகளையும் கேட்ட தாக 20:25-32 வசனங்களிலும்

அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

மேற்கூறிய நபிமார்களில் எவரும் தங்கள் தேவைகள் இறைவனுக்குத் தெரியும் என்பதை உணராதவர்களில்லை கேட்பதை அல்லாஹ் விரும்புகிறான் என்பதற்காக அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டுள்ளார்கள், இந்த வசனங்கள் மூலம் அந்த உரையாடல் கற்பனையானது தான். அல்லாஹ்விடம் துஆ செய்வதை விட உயர் ந்த நிலை எதுவுமில்லை என்பதைத் தெரியாலாம்.

ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டத்தினர் இந்தக் கற்பனை நிகழ்ச்சியை ஆதாரமாக வைத்து. அல்லாஹ்விடம் கேட்காமலிருப்பது தான் உயர்ந்த நிலை! அல்லாஹ்விடம் துஆ செய்வது அல்லாஹ்வையே சந்தேகிப்பது ஆகும் என்று மக்களை வழிகெடுக்கத் துவங்கி விட்டனர். நபிமார்கள் அடைய முடியாத உயர்ந்த நிலை இருப்பதாகக் கருதுவது எவ்வளவு பெரும் பாவம் என்று அவர்களுக்குப் புரியவில்லை.

அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் பல இடங்களில் துஆ செய்யும்படி, தேவைகளைக் கேட்கும்படி, மன்னிப்புக் கேட்கும்படி.நமக்கு ஆணையிடுகிறான். ஒரு இடத்தில் கூட என்னிடம் கேட்காமலிருங்கள் என்று சொல்லவில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.

அல்குர்ஆன் 40:60

எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான் எனக் கூறுவீராக! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே மீள்வீர்கள்!

அல்குர்ஆன் 7:29

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் 7:55

இந்த வசனங்கள் எல்லாம் பிரார்த்தனை செய்ய வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன.

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.

அல்குர்ஆன் 18:28

தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!

அல்குர்ஆன் 6:52

மேற்கூறிய வசனங்கள் துஆ செய்வதை அல்லாஹ் விரும்புகிறான், வரவேற்கிறான், தன் நபியையும் அத்தகைய மக்களுடன் சேர்ந்திருக்கும் படி கட்டளையிடுகிறான் என்பதை தெளிவுபடுத்துகின்றது. தாங்கள் அதிக ஞானம் பெற்றுவிட்டதாக கருதிக்கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்யாமலிருக்க எவருக்கும் அனுமதி இல்லை என்பதை நாம் புரி ந்து கொண்டோம்.

அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் செருப்பின் வார் அறுந்து விட்டாலும் அல்லாஹ்விடம் கேளுங்கள்! என்றனர்.(நூல் : திர்மிதீ)

 :துஆ என்பதே ஒரு வணக்கமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, இ ந்த இடத்தில் நீ ங்கள் விரும்பினால் பின் வரும் குர்ஆன் வசனத்தையும் சேர்த்துக் கொள்ளு ங்கள் என்று கூறினார்கள்.

உங்கள் இறைவன் கூறுகிறான் ;- என்னையே அழையுங்கள் ! நான் உ ங்களுக்காக (உங்கள் அழைப்பை) அங்கீகரிக்கிறேன். எவர்கள் எனது வணக்கத்தை விட்டும் (புறக்கணித்து) பெருமை அடிக்கின்றார்களோ அவர்கள் நரகில் இழிந்தவர்களாக நுழைவர் (அல் குர் ஆன் 40:60) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : அபூ தாவூது, நஸயீ, திர்மிதீ, இப்னு மாஜா

மேற்கண்ட நபிமொழி துஆ ஒரு வணக்கம் என்பதையும், அந்த வணக்கத்தைப் புறக்கணிப்பவர்கள் நரகில் இழிந்த நிலையில் நுழைவார்கள் என்பதையும் நமக்குப் பறை சாற்றுகின்றது.

இந்த எச்சிரிக்கைக்கு முரணாக மிகச்சிறந்த நபி ஒருவர் இருந்திருக்க முடியுமா? நரகில் சேர்க்கக் கூடிய இ ந்த வார்த்தையை ஒரு நபி சொல்லி இருக்க முடியுமா? என்பதயும் எண்ணிப்பாரு ங்கள்!

மேலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் தான் நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்ட வேளையில், யா அல்லாஹ் ! வணங்கப்படத் தகுதியானவன் நீ ஒருவனே ; இந்த பூமியில் உன்னை வணங்கக் கூடியவன் (இன்றைய நீலையில்) நான் ஒருவனே! (எனவே என்னைக் காப்பாற்றுவாயாக) என்று பிரார்த்தித்தார்கள் என நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

,ஆதாரம் : முஸ்னத் அபூ யஃலா

இப்ராஹீம் (அலை) நெருப்பில் எறியப்பட்டபோது, எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்: அவனே என்னுடைய மிகச்சிறந்த பொறுப்பாளனாகவும் இருக்கிறான் எனக் கூறினார்கள் .

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்,

ஆதாரம் : புகாரி

மேற்கூறிய இரு ஹதீஸ்களும் இப்ராஹீம் (அலை) துஆ செய்துள்ளதை மிகத் தெளிவாகவே தெரிவிக்கின்றன.

எனவே இப்ராஹீம் (அலை) துஆ செய்ய மறுத்தார்கள் என்பது முற்றிலும் ஆதாரமற்ற , குர்ஆன் போதனைக்கு முரண்பட்ட கற்பனை தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

அந்தக் கதை இஸ்லாத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்டது என்பதைப் பின்வரும் நபிமொழி தெளிவாகவே சொல்லிவிடுகின்றது. எவன் அல்லாஹ்விடம் தன் தேவைகளைக் கேட்கவில்லையோ, அவன் மீது அல்லாஹ் கோபப்படுகிறான் என்பது நபிகள் நாயகம் (ஸல்) , அவர்கள் கூறிய பொன்மொழியாகும் .

இதனை இமாம் ஹாகிம் அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஹதீஸ்கலை வல்லுனர்கள் இது ஆதாரபூர்வமானது என்று கூறியுள்ளனர்.

இந்த நபி மொழியிலிருந்து இப்ராஹீம் (அலை) அவர்கள் தன்னுடைய தேவையை கேட்க மறுத்திருக்க மாட்டார்கள் என்பது தெளிவு! அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு காரியத்தை மிகப்பெரும் நபி எப்படி செய்திருப்பார்கள்?

துஆ கேட்காமலிருப்பதற்கு இஸ்லாத்தின் அனுமதி கிடையாது. அத்தகையவர்களை அல்லாஹ் கோபிக்கிறான் எனும்போது அது மிகப் பெரும் பாவம் என்பதும் தெளிவு. அதனால் நபி (ஸல்) அவர்கள் நமக்கு எண்ணற்ற துஆக்களைக் கற்றுத் தந்துள்ளனர்.

இது போன்ற கதைகளும், அது போதிக்கின்ற தவறான வழிகாட்டுதல்களும் தவிர்க்கப்பட்டாக வேண்டும்…

அல்லாஹ் உண்மை மார்க்கத்தை அறிந்து அதன்படி செயல்பட அருள் புரிவானாக….

17.04.2013. 23:58 PM