நடுநிலைவாதிகள் பற்றி

நாங்கள் எந்த இயக்கத்தையும் சாராதவர்கள் என்று சொல்லும் தவ்ஹீத்வாதிகள் நம்மை மட்டும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ வெறுப்பதும், சாடுவதுமாக உள்ளனரே ஏன்? இவர்கள் நம்மை தாவா செய்ய அல்லது நல்ல பணிகளுக்காக அழைத்தால் நாம் என்ன செய்வது?

மு.அப்துல்மாலிக், திருத்துறைப்பூண்டி

பதில்:

எந்த இயக்கத்தையும் சாராதவர்கள் என்பது ஒரு போர்வை தான். நம் பக்கம் மக்கள் நம்பிக்கை வைத்து செல்வதைப் பிடிக்காத சிலர் அவதூறு பரப்பி மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பார்கள். அதைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்வதால் உரிய முறையில் இதை நாம் எதிர்கொள்ள முடியும்.

நம் மீது அவதூறு பரப்பினாலும் நம் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை என்பதைக் காணும் சிலர் தந்திரமான முறையில் மக்களை நம்மிடமிருந்து அப்புறப்படுத்தும் வேலையைச் செய்வார்கள்.

நமக்கு யாரும் வேண்டாம்; நாம் எதிலும் சேராமல் இருப்போம் என்று கூறுவது தான் அந்தத் தந்திரம்.

இவர்கள் அவர்களைக் குறை சொல்கிறார்கள். அவர்கள் இவர்களைக் குறை சொல்கிறார்கள். நாம் இவர்களை விட நல்லவர்களாக எதிலும் சேராமல் இருப்போம் எனக் கூறி நடிப்பார்கள்.

ஆனால் இவர்களுக்கும் தோல்வி தான் கிடைத்து வருகிறது. என்ன தான் மறைக்க முயன்றாலும் அவர்களின் கலரை வெளிப்படுத்தும் வகையில் நமக்கு எதிரான இயக்கங்களின் நிகழ்ச்சிகளுக்கு ஆள் பிடிக்கும் போதும், அது போன்ற பிரசுரங்களை வெளியிடும் போதும் இவர்கள் முனாஃபிக்குகள் என்பது வெளிச்சமாகி விடுகிறது. மக்களும் இவர்களை அடையாளம் கண்டு கொள்கின்றனர்.

ஒருவன் மோசடி செய்கிறான். இவன் செய்வது மோசடி என்று இன்னொருவன் சொல்கிறான். இதைப் பார்க்கும் இந்த நடுநிலை சந்தர்ப்பவாதிகள் கூட்டம் மோசடி செய்பவனுக்கு எதிராக இருக்காமல், இருவரும் சண்டையிடுவதால் நான் நடுநிலை வகிக்கப் போகிறேன் என்று கூறினால் இவனும் திருடன் தான். மோசடிக்காரன் தான்.

திருட்டில் பங்கு போடுவதற்காக அல்லது நாளை நாம் திருடும் போது மற்றவர்கள் சப்போர்ட் செய்ய வேண்டுமென்பதற்காக நாங்கள் நடுநிலை எனக் கூறிக் கொண்டு நம்மை மட்டும் எதிர்ப்பதற்குக் காரணம் இது தான்.

நடுநிலை வேசம் போடுவோரில் ஆயிரத்தில் ஒருவர் அனைவரையும் சம தூரத்தில் வைத்து நடந்து கொள்கிறார். அவர் துரோகம் செய்யவில்லை. நடிக்கவில்லை. ஆனாலும் நல்லவர்களையும் கெட்டவர்களையும் சம தூரத்தில் வைக்கும் குற்றம் செய்தவராக ஆகிறார். ஆனால் அதிகமான நடுநிலைவாதிகள் சந்தர்ப்பவாதிகளாகவும் சத்தியத்துக்கு எதிராக களம் இறங்கியவர்களுக்கு பலம் சேர்ப்பவர்களாகவும் தான் உள்ளனர்.

நமக்கும் மற்ற இயக்கங்களுக்கும் போராட்ட வழிமுறைகள் உட்பட பல வேறுபாடுகள் உள்ளன.

போராட்டம் நடத்துவது நம்முடைய இருப்பைக் காட்டிக் கொள்வதற்கு அல்ல. கோரிக்கைகளை வென்றெடுக்கத் தான் போராட்டம் நடத்த வேண்டும். ஆனால், அதிகமான முஸ்லிம் இயக்கங்களை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பெரிய கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்கள். தேர்தலின் போது ஆதரவு அளிப்பதுடன் நிற்காமல் தொடர்ந்து அதில் நீடிக்கிறார்கள்.

இவர்கள் திமுக கூட்டணியில் இருந்தால் அந்தக் கட்சியின் கேடுகளை எதிர்த்துப் போராட மாட்டார்கள். அதிமுக கூட்டணியில் இருந்தால் அதன் தீமைகளை எதிர்த்துப் போராட மாட்டார்கள்.

திமுக ஆட்சி நடக்கும் போது அக்கட்சியுடன் கூட்டணி கண்டவர்கள் இட ஒதுக்கீட்டுக்காகக் கூடபோராடியதில்லை.

அதிமுகவுடன் கூட்டணி கண்டவர்கள் அக்கட்சியின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடியது இல்லை.

இரண்டு கூட்டணிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டால் மட்டும் தான் போராட்டக்களத்துக்கே வருகிறார்கள்.

அப்படியானால் இவர்களின் நோக்கம் கோரிக்கைகள் அல்ல. தங்கள் கூட்டணிக் கட்சிக்கு ஆதரவாக மக்களை மாற்றுவதும் அதைக் காட்டி அரசியல் ஆதாயம் அடைவதும் தான்.

இப்படி நன்றாகத் தெரியும் போது நாம் எப்படி அவர்களுடன் சேர்ந்து போராட முடியும்? நாளைக்கு கோரிக்கைகளைக் கைகழுவி விட்டு நீர்த்துப் போகச் செய்து விட்டால் நடத்திய போராட்டம் அர்த்தமில்லாமல் போய் விடும்.

நாமும் ஒரு நேரத்தில் அதிமுக கூட்டணியை ஆதரித்துள்ளோம். இன்னொரு கட்டத்தில் திமுக கூட்டணியை ஆதரித்துள்ளோம். ஆனால் தேர்தல் முடிந்த மறுகணமே ஆதரித்த கட்சி தவறு செய்யும் போது எதிர்த்துக் களம் இறங்கத் தயங்கவில்லை.

ஜெயலலிதாவை 2001 சட்டமன்றத் தேர்தலில் நாம் தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தோம். தேர்தல் முடிந்தவுடன் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா 64 வகை உணவளித்து விருந்து அளித்த போது உடனே ஜெயலலிதாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தினோம். அதிமுக நடத்திய நோன்பு துறக்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தும் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

அது போல் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை நாம் ஆதரித்தோம். ஆனால் அதைத் தொடர்ந்து முதல்வர் வீடு முற்றுகை உள்ளிட்ட பலபோராட்டங்களை நடத்தத் தயங்கியதில்லை.

இது போல் ஒருபக்கச் சார்பு இல்லாமல் முஸ்லிம் இயக்கங்கள் செயல்படுவதில்லை என்பதால் அவர்களின் சுயநலனுக்கு நாம் உதவக் கூடாது என்பதற்காக நாம் மற்றவர்களின் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை.

சில லட்டர் பேடு இயக்கங்கள் தங்களை வளர்த்துக் கொள்வதற்காக சார்பற்ற போராட்டங்கள் நடத்தினாலும் அவர்கள் மார்க்கத்தில் சமரசம் செய்கின்றனர். தாரை தப்பட்டை அடித்தும், தனிநபர்களைத் துதித்தும் இன்னும் பல சமரசங்களைச் செய்வதையும் பார்க்கிறோம்.

முஸ்லிம் அல்லாதவர்களையும் இஸ்லாம் பற்றி அறியாதவர்களையும் அழைத்து கவுரவப்படுத்தும் வகையிலும் அவர்களை சமுதாயத்தின் காவலர்களாகவும் சித்தரிக்க முயல்கின்றனர்.

இவற்றில் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு உடன்பாடு இல்லாததால் மற்றவர்களின் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை.