501. முன்னோரைப் பின்பற்றலாமா?

ஹிஜ்ரத் செய்வதில் முந்திக் கொண்டவர்களையும், அவர்களுக்கு உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் பின்பற்றுமாறு இவ்வசனம் (9:100) கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் எதைச் சொன்னாலும் அதை நாம் பின்பற்ற வேண்டும் என்ற தவறான கொள்கை உள்ளவர்கள் இவ்வசனத்தை (9:100) தமக்குரிய ஆதாரமாகக் காட்டி மக்களை வழிகெடுக்க முயல்கின்றனர்.

இவ்வசனம் இவர்கள் கூறுகின்ற அர்த்தத்தைத் தரவில்லை. இதை விளங்குவதற்கு முன்னால் இஸ்லாமின் அடிப்படைக் கொள்கையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் என்ற பெயரில் எதைச் செய்வதாக இருந்தாலும் அது அல்லாஹ் சொன்னதாக இருக்க வேண்டும். அல்லது அவனது வஹீ மூலம் அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் சொன்னதற்கு மாற்றமாக யார் சொன்னாலும் அதற்கும் இஸ்லாமுக்கும் சம்மந்தமில்லை. அது போல் அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லாத ஒன்றை இஸ்லாமின்  பெயரால் யார் சொன்னாலும் அதற்கும் இஸ்லாமுக்கும் சம்மந்தமில்லை.

இது தான் இஸ்லாமின்  அடிப் படைக் கொள்கை.

அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லாத ஒன்றை நபித்தோழர்கள் சொல்லி இருந்தாலும், நல்லறிஞர்கள் என அறியப்பட்டவர்கள் சொல்லி இருந்தாலும் அதற்கும் இஸ்லாமுக்கும் சம்மந்தமில்லை.

நேர்வழி காட்டும் அதிகாரம் எவருக்கும் இல்லை; அது எனக்கு மட்டுமே உரியது என்பது தான் இறைவனிடமிருந்து மண்ணுலகுக்கு வந்த முதல் கட்டளை.

முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் இறைவனால் நேரடியாகப் படைக்கப்பட்டவர்கள். இறைவனது ஆற்றலைக் கண்கூடாகக் கண்டவர்கள். வானவர்களை மிஞ்சும் அளவிற்கு அறிவாற்றல் வழங்கப்பட்டவர்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆதம் (அலை) அவர்களும், அவர்களின் துணைவியான அன்னை ஹவ்வா (அலை) அவர்களும் இறைவனின் ஒரு கட்டளையை மீறி விட்டனர். இதன் காரணமாக அவர்கள் வசித்து வந்த சோலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அவர்களை வெளியேற்றும் போது அவர்களிடம் இறைவன் பின்வருமாறு சொல்லி அனுப்பினான்.

இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்’ என்று கூறினோம்.

திருக்குர்ஆன் : 2:38

இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்குப் பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அப்போது எனது நேர்வழியைப் பின்பற்றுபவர் வழி தவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார். எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.

திருக்குர்ஆன் : 20:122, 123, 124

தமக்கு வழங்கப்பட்ட அறிவைக் கொண்டு மனிதர்கள் நேர்வழியைக் கண்டறிந்து கொள்வார்கள் என்றால் இவ்வாறு இறைவன் சொல்லி அனுப்பத் தேவையில்லை.

உமக்கு நான் அளப்பரிய அறிவைத் தந்துள்ளேன். அந்த அறிவைக் கொண்டு நேர்வழியைக் கண்டுபிடித்து அதன்படி நடந்து கொள் என்று இறைவன் சொல்லியிருக்கலாம். அவ்வாறு சொல்லாமல், என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அந்த நேர்வழியைப் பின்பற்றினால் தான் வெற்றி பெற முடியும் என்று சொல்லி அனுப்பினான்.

மனிதர்களிலேயே மாமேதையான ஆதம் நபி அவர்களே சுயமாக நேர்வழியைக் கண்டுபிடிக்க முடியாது; இறைவனிடமிருந்து தெரிவிக்கப்படும் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும் என்றால் எவருடைய கூற்றையும் நடவடிக்கைகளையும் நாம் மார்க்கமாக ஆக்கக் கூடாது என்பது தான் பொருள்.

ஆதம் (அலை) அவர்களே இறைவனிடமிருந்து வரும் நேர்வழியை – வஹீயை – மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றால் நபித் தோழர்களோ, மற்றவர்களோ அவரை விட உயர்ந்தவர்களா?

2:170, 3:103, 5:3, 5:48,49 5:87, 6:140, 6:106, 6:114,115, 7:3, 7:32, 9:29, 9:37, 10:15, 10:59, 16:116, 24:51,52, 33:2, 39:3, 39:58, 42:21, 46:9, 49:16, ஆகிய வசனங்களில் இக்கொள்கையை அல்லாஹ் இன்னும் தெளிவாக விளக்கியுள்ளான்.

இப்போது 9:100 வசனம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

மார்க்கத்துக்காக மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தவர்களையும், ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தவர்களுக்கு உதவியவர்களையும் இவ்வசனம் புகழ்ந்து பேசுவதுடன் அவர்களைப் பின்பற்றியவர்களையும் புகழ்ந்து பேசுகிறது. அவர்களைப் பொருந்திக் கொண்டதாகவும் அவர்களுக்காக சொர்க்கம் தயார் நிலையில் உள்ளதாகவும் இவ்வசனம் கூறுகிறது.

நபித் தோழர்களைப் பின்பற்றுமாறு அல்லாஹ்வே கட்டளையிட்டதால் தான் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என அவர்கள் வாதிடுகின்றனர்.

இவ்வசனத்தை உரிய கவனத்துடன் அணுகாத காரணத்தால் தங்களின் தவறான கொள்கைக்கு இதை ஆதாரமாகக் காட்டுகின்றனர். பின்பற்றுதல் என்ற சொல், பயன்படுத்தப்படும் இடத்துக்கு ஏற்ப பொருள் தரும் சொல்லாகும்.

குறிப்பிட்ட மனிதனின் பெயரைப் பயன்படுத்தி அவனைப் பின்பற்றி நடங்கள் எனக் கூறப்பட்டால் எல்லா வகையிலும் அவனைப் பின்பற்றுங்கள் எனப் பொருள் வரும்.

ஒரு மனிதனின் பதவி, தகுதியைக் குறிப்பிட்டு அவரைப் பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டால் அந்தத் தகுதியுடன் தொடர்புடைய விஷயங்களில் அவரைப் பின்பற்றுங்கள் என்று பொருள் வரும்.

காவல்துறை அதிகாரியைப் பின்பற்றுங்கள் என்றோ காவல்துறை அதிகாரியான மூஸாவைப் பின்பற்றுங்கள் என்றோ கூறப்பட்டால் காவல்துறை அதிகாரி என்ற முறையில் அவருக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அந்த விஷயத்தில் பின்பற்றுங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். வியாபாரம், திருமணம், வணக்கம் போன்றவற்றில் அவரைப் பின்பற்ற வேண்டும் என்ற பொருள் வராது.

கொடை வள்ளலை, அல்லது கொடைவள்ளலான இப்ராஹீமைப் பின்பற்றுங்கள் எனக் கூறப்பட்டால் வாரி வழங்கும் தன்மையில் மட்டும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்ற பொருள் வரும். அவர் என்ன சொன்னாலும் கேளுங்கள்! அவர் என்ன செய்தாலும் அதையே செய்யுங்கள் என்று பொருள் கொள்ள முடியாது.

இவ்வசனத்தில் எந்த மனிதரையும் பின்பற்றுமாறு கூறப்படவில்லை. மாறாக ஹிஜ்ரத் செய்வதில் முந்திக் கொண்டவர்களையும், அவர்களுக்கு உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் பின்பற்றுமாறு தான் இவ்வசனம் கூறுகிறது.

அதாவது ஹிஜ்ரத் செய்வதில் யார் முந்திக் கொண்டார்களோ அவர்களைப் பின்பற்றி சிலர் தாமதமாக ஹிஜ்ரத் செய்தனர் என்பதே இதன் பொருள். உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களைப் பின்பற்றினார்கள் என்றால் உதவுவதில் அவர்கள் வழியில் சென்றார்கள் என்பது தான் பொருள்.

அடுத்ததாக இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.

முஹாஜிர்கள், அன்ஸார்கள் என அல்லாஹ் கூறுவது சஹாபாக்களைத் தான் என்றாலும் அவர்களைப் பின்பற்றுமாறு இதில் நமக்கு எந்தக் கட்டளையும் இல்லை. அவர்களை யார் பின்பற்றுகிறார்களோ என்று வருங்கால வினைச் சொல்லாக இறைவன் கூறாமல் பின்பற்றினார்களோ என்று இறந்தகால வினைச் சொல்லாகக் கூறுகிறான்.

பின்பற்றுகிறார்களோ என்று கூறினால் இப்போதும் அவர்களைப் பின்பற்றலாம் என்ற பொருள் வரும். பின்பற்றினார்களோ என்று கூறினால் இவ்வசனம் அருளப்படுவதற்கு முன்னர் பின்பற்றி நடந்தவர்களைத் தான் அது குறிக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.

எனவே முஹாஜிர்கள், அன்ஸார்கள் என்பது எவ்வாறு நபித்தோழர்களைக் குறிக்குமோ அது போல் முஹாஜிர்களைப் பின்பற்றியவர்கள் என்பதும் அன்ஸார்களைப் பின்பற்றியவர்கள் என்பதும் நபித்தோழர்களைத் தான் குறிக்கும்.

ஆரம்ப முஹாஜிர்களுக்கும், அவர்களைப் பின்பற்றி ஹிஜ்ரத் செய்த முஹாஜிர்களுக்கும், ஆரம்ப கால அன்சார்களுக்கும், அவர்களைப் பின்பற்றி உதவிகள் புரிந்த அன்ஸார்களுக்கும் அல்லாஹ்வின் திருப்தி உண்டு என்று தான் இவ்வசனம் கூறுகிறது. இவர்கள் அனைவருமே நபித்தோழர்கள் தான். நபித்தோழர்கள் அல்லாதவர்களை இது குறிக்காது.

ஹிஜ்ரத் செய்வதிலும், ஹிஜ்ரத் செய்தவர்களை அரவணைப்பதிலும் அவர்களைப் பின்பற்றியவர்கள் என்ற வாசகம் பொதுவாகப் பின்பற்றுவதைக் குறிக்காது.

முன்னதாக ஹிஜ்ரத் செய்தவர்களிடம் ஹிஜ்ரத்தின் போது தவறான காரியங்கள் நிகழ்ந்திருக்கலாம். அதைப் பின்பற்றக் கூடாது என்பதற்காகத் தான் அழகிய முறையில் பின்தொடர்ந்தவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் எனக் கூறும் ஏராளமான ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் இவ்வசனத்தை விளங்கும் சரியான முறை இதுவேயாகும்.

முஹாஜிர்கள், அன்ஸார்கள் ஆகியோர் மார்க்கம் என்று எதைச் சொன்னாலும், செய்தாலும் அதை அப்படியே நாமும் பின்பற்ற வேண்டும் என்று பொருள் கொண்டால் வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடைய வசனங்கள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்படும். அல்லது நபித்தோழர்களுக்கும் வஹீ வந்தது என்ற நிலை ஏற்படும். இரண்டுமே தவறாகும்.

எனவே நபித்தோழர்களின் சொற்கள், செயல்கள் மார்க்க ஆதாரங்களாகும் என்ற கருத்தை இவ்வசனம் தரவில்லை.

மாற்றுக் கருத்துடையவர்கள் இவ்வசனத்துக்கு அளிக்கும் விளக்கம் தவறு என்பதை இது போல் அமைந்த மற்றொரு வசனத்தின் மூலமும் நாம் அறிய முடியும்.

யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டவன்.

திருக்குர்ஆன் 52:21

9:100 வசனத்தை மாற்றுக் கருத்துடையவர்கள் விளங்கியது போல் இவ்வசனத்தையும் விளங்குவதாக இருந்தால் ஒவ்வொருவரும் தனது முஃமினான பெற்றோரைப் பின்பற்றலாம் என்ற கருத்து வரும். அதாவது ஸஹாபாக்களை மட்டும் பின்பற்றுவது அவசியம் இல்லை. தனது தாய் தந்தை எதை மார்க்கம் என்று கடைப்பிடித்தார்களோ அதையே நாமும் செய்ய வேண்டும் என்ற கருத்து வரும்.

சரியான முறையில் நம்பிக்கை கொண்ட பெற்றோரை அது போல் சரியான நம்பிக்கை கொண்டு பிள்ளைகளும் பின்பற்றினால் அவர்களின் கூலியைக் குறைக்காது அளிப்போம் என்பது தான் இதன் பொருள்.

பெற்றோரின் எல்லா நடவடிக்கைகளையும் அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல என இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு வசனங்களுக்கு வெவ்வேறு விதமாக விளக்கம் அளிப்பதிலிருந்து அவர்களின் வாதம் தவறு என்பதை அறியலாம்.

உங்களில் சிறந்தவர்கள் என் காலத்தவர்கள். பின்னர் அவர்களை அடுத்து வருவோர். அதன் பின்னர் அவர்களை அடுத்து வருவோர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் தொடர்ந்து உங்களுக்குப் பின் நாணயமாக நடக்காத மோசடி செய்பவர்களும், சாட்சியம் அளிக்க அழைக்கப்படாமலே சாட்சி கூறுபவர்களும், நேர்ச்சை செய்து அதை நிறை வேற்றாதவர்களும் தோன்று வார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும் எனவும் கூறினார்கள்.

நூல் : புகாரீ 2651, 3650, 6428, 6695

தமது காலத்தவரையும், அதற்கு அடுத்த காலத்தவரையும் மிகச் சிறந்த சமுதாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நபித் தோழர்களை நாம் பின்பற்றலாம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

இந்த நபிமொழி ஆதாரப்பூர்வமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதில் நபித்தோழர்களைப் பின்பற்றச் சொல்லும் வகையில் ஒரு வாசகமும் இல்லை. இதன் பொருள் என்ன? என்பதை இதன் இறுதியிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

அதாவது அந்தச் சமுதாயத்தில் நாணயம், நேர்மை, வாக்கை நிறைவேற்றுதல், வலியச் சென்று எதிலும் தலையிடாமல் இருப்பது போன்ற நற்பண்புகள் அதிக அளவில் இருக்கும். பிந்தைய சமுதாயத்தில் அது குறைந்து விடும் என்பது தான் அந்த விளக்கம்.

நபித்தோழர்களின் சிந்தனையிலும், தீர்ப்புகளிலும், முடிவுகளிலும், ஆய்வுகளிலும் எந்தத் தவறும் ஏற்படாது என்பதால் அவர்கள் சிறந்தவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருந்தால் அவர்களைப் பின்பற்றலாம் என்ற கருத்து அதனுள் அடங்கி இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

அவர்களின் நாணயம், நேர்மை காரணமாக சிறந்தவர்கள் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாணயமாகவும், நேர்மையாகவும் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களின் சிந்தனையில் தவறே ஏற்படாது என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள்.

மேலும் வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று நாம் எடுத்துக் காட்டிய ஏராளமான ஆதாரங்களுக்கு முரணாக இந்த ஹதீஸை நாம் விளங்கினால் நபித் தோழர்களுக்கும் இறைவனிடமிருந்து வஹீ வந்துள்ளது என்ற விபரீதமான கருத்து வரும்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...