இறந்தவருக்காக ஃபாத்திஹாக்கள் ஓதலாமா?

ஒரு நபித்தோழர் மரணித்த அன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரின் வீட்டில் உணவு உண்டார்கள் என்று ஹதீஸ் உள்ளதாகவும், 3, 7, 10, 40 ஃபாத்திஹாக்கள் மற்றும் வருட ஃபாத்திஹா ஓதி சாப்பாடு உண்ணலாம்; தவறில்லை என்றும் ஒருவர் கூறுகின்றார். இது சரியா?

பதில்:

இறந்தவரின் வீட்டிற்குப் போய் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டதாக எந்த ஹதீஸும் இல்லை.

கீழ்க்காணும் ஹதீஸைத் தான் தவறான முறையில் திசை திருப்பி இவ்வாறு வாதிடுகின்றனர்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ أَخْبَرَنَا ابْنُ إِدْرِيسَ أَخْبَرَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْقَبْرِ يُوصِي الْحَافِرَ أَوْسِعْ مِنْ قِبَلِ رِجْلَيْهِ أَوْسِعْ مِنْ قِبَلِ رَأْسِهِ فَلَمَّا رَجَعَ اسْتَقْبَلَهُ دَاعِي امْرَأَةٍ فَجَاءَ وَجِيءَ بِالطَّعَامِ فَوَضَعَ يَدَهُ ثُمَّ وَضَعَ الْقَوْمُ فَأَكَلُوا فَنَظَرَ آبَاؤُنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلُوكُ لُقْمَةً فِي فَمِهِ ثُمَّ قَالَ أَجِدُ لَحْمَ شَاةٍ أُخِذَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا فَأَرْسَلَتْ الْمَرْأَةُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرْسَلْتُ إِلَى الْبَقِيعِ يَشْتَرِي لِي شَاةً فَلَمْ أَجِدْ فَأَرْسَلْتُ إِلَى جَارٍ لِي قَدْ اشْتَرَى شَاةً أَنْ أَرْسِلْ إِلَيَّ بِهَا بِثَمَنِهَا فَلَمْ يُوجَدْ فَأَرْسَلْتُ إِلَى امْرَأَتِهِ فَأَرْسَلَتْ إِلَيَّ بِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَطْعِمِيهِ الْأُسَارَى

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவுக்குச் சென்றிருந்தோம். அப்போது கால்மாட்டிலும், தலைமாட்டிலும் விசாலமாக்கு என்று குழி தோண்டுபவரிடம் அவர்கள் கூறினார்கள். அவர்கள் திரும்பும் பொழுது ஒரு பெண்ணின் அழைப்பாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். உணவு கொண்டு வரப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கைகளை அதில் வைத்தார்கள். மக்களும் வைத்தார்கள்; சாப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கவள உணவைத் தமது வாயில் மெல்லுவதை எங்களுடைய பெற்றோர் பார்த்தனர். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உரியவரின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட ஆட்டிறைச்சியை நான் சாப்பிடுகிறேன் என்று கூறினார்கள். அப்போது அந்தப் பெண் அல்லாஹ்வின் தூதரே! எனக்காக ஓர் ஆடு வாங்கி வரும்படி பகீஃ (சந்தை)க்கு ஆளனுப்பினேன். எனக்கு ஆடு கிடைக்கவில்லை. எனது அண்டை வீட்டுக்காரர் ஓர் ஆடு வாங்கியிருந்தார். அதன் கிரையத்தைப் பெற்று ஆட்டைத் தாருங்கள் என்று அவரிடம் ஆளனுப்பினேன். அவர் (வீட்டில்) இல்லை. அதனால் அவரது மனைவியிடம் கேட்டு ஆளனுப்பினேன். அவர் அந்த ஆட்டை அனுப்பி வைத்தார் என்று அந்தப் பெண் பதில் சொல்லி அனுப்பினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கைதிகளுக்குச் சாப்பிடக் கொடு என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அன்சாரியைச் சேர்ந்த ஒரு மனிதர்

நூல்கள்: அபூதாவூத் 2894, பைஹகீ, தாரகுத்னீ

ஒரு பெண் உணவு கொடுத்து அனுப்பினாள் என்று இந்த ஹதீஸில் கூறப்படுகின்றது. அந்தப் பெண் இறந்தவரின் மனைவி தான் என்று கூறி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த வீட்டில் சாப்பிட்டதாகக் கூறுகின்றனர்.

ஆனால் மேற்கண்ட ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்தனுப்பிய பெண், இறந்தவரின் மனைவி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இறந்தவரின் வீட்டிற்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள் என்றும் இந்த ஹதீஸில் கூறப்படவில்லை.

மேலும் அந்த ஹதீஸில் அவர்கள் திரும்பும் பொழுது ஒரு பெண்ணின் அழைப்பாளர் அழைத்ததாகவே கூறப்படுகிறது. எனவே இறந்தவரின் குடும்பத்துப் பெண்ணாக அவர் இருக்க முடியாது என்பது இதிலிருந்து உறுதியாகிறது.

حدثنا معاوية بن عمرو حدثنا أبو إسحاق عن زائدة عن عاصم بن كليب عن أبيه أن رجلا من الأنصار أخبره قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة فلما رجعنا لقينا داعي امرأة من قريش فقال يا رسول الله إن فلانة تدعوك ومن معك إلى طعام فانصرف فانصرفنا معه فجلسنا مجالس الغلمان من آبائهم بين أيديهم ثم جيء بالطعام فوضع رسول الله صلى الله عليه وسلم يده ووضع القوم أيديهم ففطن له القوم وهو يلوك لقمته لا يجيزها فرفعوا أيديهم وغفلوا عنا ثم ذكروا فأخذوا بأيدينا فجعل الرجل يضرب اللقمة بيده حتى تسقط ثم أمسكوا بأيدينا ينظرون ما يصنع رسول الله صلى الله عليه وسلم فلفظها فألقاها فقال أجد لحم شاة أخذت بغير إذن أهلها فقامت المرأة فقالت يا رسول الله إنه كان في نفسي أن أجمعك ومن معك على طعام فأرسلت إلى البقيع فلم أجد شاة تباع وكان عامر بن أبي وقاص ابتاع شاة أمس من البقيع فأرسلت إليه أن ابتغي لي شاة في البقيع فلم توجد فذكر لي أنك اشتريت شاة فأرسل بها إلي فلم يجده الرسول ووجد أهله فدفعوها إلى رسولي فقال رسول الله صلى الله عليه وسلم أطعموها الأسارى

அஹ்மத் (21471) நூலின் அறிவிப்பில் நாங்கள் திரும்பிய போது குரைஷ் குலப் பெண்ணின் அழைப்பாளரைச் சந்தித்தோம் என்று கூறப்படுகிறது.

ஜனாஸாவில் பங்கெடுத்து விட்டு திரும்பும் போது தான் குரைஷ் குலப் பெண் விருந்துக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது.

எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, இறந்தவரின் வீட்டில் போய் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள் என்று கூறுவது தவறாகும்.

ஒரு வாதத்திற்கு இதை ஏற்றுக் கொண்டாலும் 3 ஆம் பாத்திஹா, 7 ஆம் பாத்திஹா, 40 ஆம் பாத்திஹா ஓதுவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது? இது போன்று சம்பந்தமில்லாத ஆதாரங்களைக் கூறுவதிலிருந்தே இவை பித்அத் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும் இந்த ஹதீஸின் கருத்தும் தவறாக உள்ளது.

இந்த ஹதீஸில் அறுக்கப்பட்ட ஆடு திருடப்பட்ட ஆடு அல்ல. உரிமையாளரின் மனைவியால் கொடுக்கப்பட்ட ஆடாகும். ஆட்டின் உரிமையாளரின் மனைவி பிறகு பணம் வாங்கிக் கொள்ளும் நோக்கத்தில் கொடுத்து அனுப்பியதால் அது அபகரிக்கப்பட்ட ஆடு என்ற கணக்கில் சேராது.

உரிமையாளரின் அனுமதி இல்லாமல் அறுக்கப்பட்ட ஆடு என்று கூறி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தவிர்த்திருக்க மாட்டார்கள்.

صحيح البخاري

1425 – حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا أَنْفَقَتِ المَرْأَةُ مِنْ طَعَامِ بَيْتِهَا غَيْرَ مُفْسِدَةٍ، كَانَ لَهَا أَجْرُهَا بِمَا أَنْفَقَتْ، وَلِزَوْجِهَا أَجْرُهُ بِمَا كَسَبَ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ، لاَ يَنْقُصُ بَعْضُهُمْ أَجْرَ بَعْضٍ شَيْئًا»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை -வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளது கணவனுக்கும் கிடைக்கும்; அது போலவே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்துவிட முடியாது.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 1425

கணவனின் உணவுகளை மனைவி தானமாகக் கொடுத்தாலே அதற்கு நன்மை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். இது கிரயமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது எனும் போது அதை வாங்கி அறுத்தது ஹராமாக ஆகாது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர்த்திருக்க மாட்டார்கள்.

மேலும் இது மார்க்கத்தில் அனுமதி இல்லாத உணவு என்றால் கைதிகளுக்குக் கொடுக்குமாறு கூறியிருக்க மாட்டார்கள். ஹராமான உணவு என்றால் நாமும் சாப்பிடக் கூடாது; மற்றவருக்கும் கொடுக்கக் கூடாது.

இஸ்லாத்தின் இந்த அடிப்படைக்கு மாற்றமாகவும் இதன் கருத்து அமைந்துள்ளது.

09.09.2009. 18:23 PM