விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறதா?

பதில்

இந்தக் கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் பொய்யர்களால் இட்டுக்கட்டப்பட்டவையாகும்.

أخبار أصبهان

540 – حدثنا أبو بكر أحمد بن محمد بن يحيى الضرير الخباز ، ثنا عبد الله بن محمد بن عبد العزيز ، ثنا أبو إبراهيم الترجماني ، ثنا عمرو بن جميع ، عن جويبر ، عن الضحاك ، عن النزال ، عن علي ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : « تزوجوا ولا تطلقوا ، فإن الطلاق يهتز له العرش »

திருமணம் செய்யுங்கள்! விவாகரத்து செய்யாதீர்கள். விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அலி ரலி,

நூல் : அக்பாரு உஸ்பஹான்

இதன் அறிவிப்பாளர் தொடரில் அம்ரு பின் ஜமீவு என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர்களின் பெயரைப் பயன்படுத்தி ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்பவர் ஆவார்.

இதே ஹதீஸ் தாரீகு பக்தாத் என்ற நூலிலும், மவ்லூஆத் இப்னுல் ஜவ்ஸீ என்ற நூலிலும், தைலமி என்ற நூலிலும், பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நூல்களிலும் அம்ரு பின் ஜமிவு என்பார் தான் அறிவிப்பதால் இதுவும் இட்டுக்கட்டப்பட்டதாகும்.

மேலும் இதன் மறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள ஜுவைபிர் என்ற அறிவிப்பாளரும் இட்டுக்கட்டக் கூடியவர் ஆவார்.

இட்டுக்கட்டும் இருவர் வழியாக மட்டுமே இந்த ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இது பொய்யான ஹதீஸாகும்.