வஞ்சிக்கப்படும் முஸ்லிம் சமுதாயம்!

மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி பயங்கர குண்டு வெடித்தது. இந்தக் குண்டு வெடிப்பில் சிக்கி 5 வெளிநாட்டவர்கள் உட்பட 17 பேர் இறந்தனர். 64 பேர் படுகாயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்பு சம்பந்தமாக அதே ஆண்டு செப்டம்பர் மாதம் புனே பேருந்து நிலையத்தில் வைத்து மிர்சா ஹிமாயத் பெய்க் என்பவரை போலீசார் கைது செய்தனர். இது தவிர அபு ஜிண்டால் என்பவரையும் இந்தக் குண்டு வெடிப்பு வழக்கில் சேர்த்தனர்.

ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடித்தபோது அபு ஜிண்டால் வெளியில் இல்லை. மாறாக மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்தார். இப்படி சிறைக்குள் இருந்தவரைத் தான் ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்த வழக்கில் போலீசார் சேர்த்தனர்.

ஒருவர் சிறைக்குள் இருந்துகொண்டு, வெளியில் வந்து ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்தார் எனில் இந்தக் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யாக இருக்க வேண்டும். அல்லது சிறை அதிகாரிகள் இவரை சட்டவிரோதமான முறையில் வெளியில் அனுப்பி குண்டுகளை வெடிக்கச் செய்தார்கள் என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும் போது அபு ஜிண்டாலுடன் சேர்த்து, சிறை அதிகாரிகளையும் ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்க வேண்டும். இதில் எதையுமே செய்யவில்லை.

இதில் இன்னொரு கூத்தும் நடந்துள்ளது. அபு ஜிண்டாலை ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பில் போலீசார் சேர்த்தார்களே தவிர இந்த வழக்கில் இவரை போலீசார் கைது செய்யவே இல்லை. கைது செய்து, போலீஸ் கஸ்டடியில் எடுத்து இவரை விசாரிக்கவும் இல்லை. இவர் மீதான வழக்கை நடத்தவும் இல்லை. இவருக்கு நீதிமன்றம் எந்தத் தண்டனையும் வழங்கவில்லை. ஆனால் ஹிமாயத் பெய்க்குக்கு மட்டும் புனே அமர்வு நீதிமன்றம் 18.04.2013 அன்று தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பெய்க்கின் வழக்கறிஞர் அப்துர் ரஹ்மான் ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடித்தபோது பெய்க் புனேவிலேயே இல்லை. மாறாக அவர் ஔரங்காபாத்தில் இருந்தார். ஔரங்காபாத்தில் இருந்துகொண்டு ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் புனேயில் எப்படி வெடிகுண்டு வெடிக்கச் செய்ய முடியும்? இதை நீதிபதி கவனிக்கத் தவறி விட்டார். எனவே நாங்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்தார்.

இந்த நாட்டில் குண்டு வெடிப்பு வழக்கில் ஒருவரை தூக்கில் போடுவதற்கு அவர் குற்றம் செய்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர் முஸ்லிமாக இருந்தால் போதும். இந்த குறைந்தபட்ச தகுதிக்காகவே அவர் தூக்கில் போடப்படுவார் என்பது கடந்த கால வரலாறு.

பாராளுமன்றத் தாக்குதலில் பேராசிரியர் ஜிலானி, அப்சல் குரு ஆகியோருக்கு நேரடியான எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த இருவருக்கும் செசன்ஸ் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து, உயர் நீதிமன்றம் அதை உறுதி செய்து, உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில் பேராசிரியர் ஜிலானி குற்றவாளி அல்ல என்று நிரூபிக்கப்பட்டு அப்சல் குரு மட்டும் தூக்கில் போடப்பட்டார்.

அப்சல் குருவும் கூட பாராளுமன்றத் தாக்குதலில் நேரடியாகச் சம்பந்தப்பட்டு துப்பாக்கியை தூக்கிக் கொண்டு பாராளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி புகுந்து சுட்டார் என்பதற்காக அவர் தூக்கிலிடப்படவில்லை. ஆதாரங்களும், சாட்சிகளும், ஆவணங்களும் உள்ளன என்பதற்காகவும் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.  அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சொல்லியும் இவருக்கு நீதிபதிகள் தூக்குத் தண்டனை விதிக்கவில்லை.

மாறாக கூட்டு மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறது. அப்சல்குரு தாக்குதல் நடத்தினார் என்று நிரூபிக்கப்படவில்லையாயினும், கூட்டு மனசாட்சி அடிப்படையில் தூக்குத் தண்டனை விதிக்கிறோம் என்று சொல்லித் தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதித்தனர். அவரும் தூக்கில் போடப்பட்டார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்றங்களும், உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை அடிப்படையாக வைத்து செசன்ஸ் நீதிமன்றம் உள்ளிட்ட நாட்டில் உள்ள எல்லா கீழ் நீதிமன்றங்களும் தீர்ப்பு வழங்கலாம்.

அதனால் ஹிமாயத் பெய்க் குற்றம் செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவும் வேண்டியதில்லை. மாறாக கூட்டு மனசாட்சி அடிப்படையில் ஆதாரங்கள், சாட்சிகள், ஆவணங்கள் இல்லாமலும் பெய்க்கிற்கு தூக்குத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

இப்படி கூட்டு மனசாட்சி அடிப்படையில் எந்த நாட்டிலும் எவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் மட்டும்தான், அதுவும் முஸ்லிம்களுக்கு மட்டும் தான் இந்த வகையில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும். இதை எதிர்த்து முஸ்லிம்கள் எதுவும் பேசி விடக்கூடாது. அவ்வளவுதான்.

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரோடா பாட்டியா என்ற இடத்தில் 97 அப்பாவி முஸ்லிம்களை மோடியின் அமைச்சரவையில் இருந்த பெண் மந்திரி மாயா கோட்னானி, பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கி தலைமையிலான கும்பல் கொடூரமாகக் கொன்று குவித்தது. இவர்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. அப்போது நீதிபதி என்ன செய்திருக்க வேண்டும்?

97 அப்பாவி முஸ்லிம்களைக் கொன்ற இவர்கள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்திருக்க வேண்டும். அப்படி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதா? இல்லவே இல்லை. ஒருவருக்குக் கூட தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.

மாறாக அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஏனெனில் கொலையாளிகள் அனைவரும் காவிக் கட்சிக்காரர்கள். கொல்லப்பட்ட 97 பேரும் அப்பாவி முஸ்லிம்கள். முஸ்லிம்களின் உயிருக்கு இந்த நாட்டில் அவ்வளவுதான் மதிப்பு. இதை முஸ்லிம்கள் புரிந்து கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட மாயா சோட்னானிக்கு ஏன் தூக்குத் தண்டனை விதிக்கவில்லை? ஔரங்காபாத்தில் இருந்த ஹிமாயத் பெய்க்குக்கு ஏன் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்று கேள்வி கேட்கக்கூடாது. அப்படி கேள்வி கேட்டால் அது தேசத் துரோகமாகிவிடும். நீதிமன்ற அவமதிப்பும் ஆகிவிடும்.

அதே குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது குல்பர்க் சொஸைட்டியில் வைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.இஹ்ஸான் ஜாப்ரி உள்ளிட்ட 69 பேர் சங்பரிவார பயங்கரவாதிகளால் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த கொலைக் குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதே தவிர ஒருவருக்குக் கூட தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை. 17 பேர் மரணத்திற்கு காரணம் என சொல்லப்படும் ஹிமாயத்திற்கு ஏன் தூக்குத் தண்டனை?

69 முஸ்லிம்களைக் கொன்று குவித்த காவி பயங்கரவாதிகளுக்கு ஏன் ஆயுள் தண்டனை? இவ்வாறு முஸ்லிம்கள் இந்த நாட்டில் நியாயம் பேசிவிடக் கூடாது. பேசினால் தீவிராவதிகள், பயங்கரவாதிகள் என்று அவர்களுக்குப் பட்டம் சூட்டப்படும்.

அதே குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது தர்வாஜா என்ற இடத்திலும் அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். இந்த பச்சைப் படுகொலைகளுக்காகவும் சங் பரிவார பயங்கரவாதிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்கள். அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக இருந்ததே தவிர ஒருவருக்குக் கூட தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை. இதைத் தெரிந்து முஸ்லிம்கள் கேள்வி கேட்டு, ஹிமாயத் பெய்க்குக்கு பரிந்து பேசிவிடக் கூடாது. பேசினால் தீவிரவாதி, பயங்கரவாதி பட்டத்தைத்தான் சுமக்க வேண்டி வரும்.

மாலேகான் குண்டு வெடிப்பு, மர்ம கோவா குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, நான்டெட் குண்டு வெடிப்பு ஆகிய இடங்களில் குண்டுவெடிப்புகளைச் செய்து நூற்றுக் கணக்கான அப்பாவி முஸ்லிம்களை நாடு முழுவதும் திட்டமிட்டுக் கொன்று குவித்த பெண் சாமியார் பிரக்யா சிங், ஆண் சாமியார் அசிமானந்த், கர்னல் புரோஹித் ஆகியோர் மீதான வழக்கு விசாரணை பல்லாண்டுகள் ஆன பிறகும் நடக்கவில்லை. இன்னும் அவர்கள் விசாரணைக் கைதிகளாகவே உள்ளனர்.

ஆனால் ஹிமாயத் பெய்க் மீதான வழக்கு 2 ஆண்டுகளுக்குள் விசாரிக்கப்பட்டு, தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது. முஸ்லிம் மீதான வழக்கு மட்டும் ஏன் இவ்வளவு சீக்கிரம் விசாரிக்கப்படுகிறது? காவி பயங்கரவாதிகள் மீதான வழக்குகள் மட்டும் ஏன் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்படுகின்றன என்று கேள்வி கேட்க இரண்டாம் தர குடி மக்களான முஸ்லிம்களுக்கு உரிமையில்லை என்பதை முஸ்லிம்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

ஹிமாயத் பெய்க்கிற்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம்தான் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. இதற்கு மேல் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை இந்த தூக்குத் தண்டனையை உறுதி செய்து, ஜனாதிபதியும் கருணை மனுவை நிராகரித்தால் தான் அவர் தூக்கில் போடப்படுவார் என எதிர்பார்க்கக் கூடாது. ஆள்வோர் நினைத்தால் நாளையே கூட பெய்க்கை தூக்கில் போட்டு விடுவார்கள். இதற்கும் முன் உதாரணங்கள் உள்ளன. ஆம். அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்தவுடன் இவ்விருவரும் கமுக்கமாக தூக்கில் போடப்பட்டார்கள்.

காலிஸ்தான் தீவிரவாதி தேவேந்தர் சிங் புல்லாரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து விட்டார். அதற்காக புல்லாரை ஆட்சியாளர்கள் தூக்கில் போடவில்லை. கருணை மனு நிராகரிக்கப்பட்ட புல்லார் உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை குறைக்க மனு செய்ய ஆள்வோரால் அனுமதிக்கப்பட்டார். அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.

அதற்குப் பிறகும் புல்லார் தூக்கில் போடப்படவில்லை. புல்லாருக்காக வளைந்த சட்டம் அஜ்மல் கசாபுக்கும், அப்சல் குருவுக்கும் ஏன் வளையவில்லை? என்று கேட்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் முஸ்லிம்கள். புல்லார் முஸ்லிம் அல்லாதவர்; இதை முஸ்லிம்கள் புரிந்து அடக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.

ராஜிவ் காந்தி கொலையாளிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன், சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் கூட்டாளிகளான மாதையன், சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம், உள்ளிட்ட 16 தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து நீண்ட வருடங்களாகி விட்டது.

அஜ்மல் கசாபையும், அப்சல் குருவையும் போல கருணை மனு நிராகரிக்கப்பட்ட இவர்கள் ஏன் தூக்கில் போடப்படவில்லை? என்று எந்த முஸ்லிமும் கேள்வி கேட்கக் கூடாது. ஏனெனில் முஸ்லிம் சமுதாயம் அடிமைச் சமுதாயம். இப்படி அடிமைச் சமுதாயமாக இருப்பதற்காகத் தான் ஆங்கிலேயரிடம் இருந்து போராடி விடுதலை பெற்று, இன்றைய ஆள்வோருக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து அடக்கமுடன்(?) நடந்துகொள்ள வேண்டும்.

பாபரி மஸ்ஜித் – முஸ்லிம்களுக்குத் தான் சொந்தமானது என்று உலகுக்கே தெரியும்! ஆனால் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாபரி மஸ்ஜிதை 3 பங்காகப் பிரித்து அதில் ஒரு பங்கு முஸ்லிம்களுக்கு உரியது. மீதி இரண்டு பங்கு முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உரியது என்று அளித்த வினோதத் தீர்ப்பை இன்றுவரை முஸ்லிம்களால் மாற்ற முடிந்ததா?

25 கோடி முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட பாபரிமஸ்ஜித் பிரச்சினையிலேயே இப்படித்தான் தீர்ப்பு இருக்கும் என்று அறிந்த பிறகு, பெய்க் சட்டப்படி தண்டிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பது அறியாமை ஆகும்.

ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கே நீதி கிடைக்கவில்லை எனும் போது தனிப்பட்ட பெய்க்கிற்கு எப்படி நீதி கிடைக்கும்? என முஸ்லிம் சமுதாயம் புரிந்து அடங்கி நடந்து கொள்ள வேண்டும்.

பாபரி மஸ்ஜித் இடிப்பில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, சாத்வி ரிதம்பரா, உமாபாரதி, வினய் கத்தியார், அசோக் சிங்கால், தொகாடியா ஆகியோருக்கு இருந்த பங்கு அகில உலக பிரசித்தம். பாபர் மஸ்ஜித் வழக்கில் இவர்களுக்கு எதிரான ஆதாரம் இருந்த அளவுக்கு இந்தியாவில் நடந்த எந்த வழக்குக்கும் ஆதாரம் இருக்கவில்லை.

அதற்காக இவர்கள் தண்டிக்கப்பட்டு விட்டார்களா? இல்லையே! இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் பெய்க்கிற்காக முஸ்லிம்கள் உரிமைக் குரல் எழுப்பி தேசத்தின் அமைதியை கெடுக்கக் கூடாது. இந்த நாடு மதசார்பற்ற நாடு. ஆனால் இங்கு சட்டம் ஆட்சி செய்யவில்லை. மனு நீதிதான் ஆள்கிறது. ஆள்வோரின் மற்றும் அதிகார வர்க்கத்தின் உள்ளத்தில் இந்த மனுநீதிதான் மண்டிப்போய் கிடக்கிறது.

இந்நிலை மாறாதவரை முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்கள் நடக்கத்தான் செய்யும். இந்த அவலநிலை மாறி, சட்டத்தின் முன் முஸ்லிம்களும் சமமாக நடத்தப்பட வேண்டுமெனில் முஸ்லிம் மக்கள் திரண்டெழுந்து வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும்.

உள்ளாட்சி, சட்டமன்ற, பாராளுமன்றங்களில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் இந்த அநியாயங்களுக்கு எதிராக உரத்து உரிமை முழக்கமிடவேண்டும். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றக் கதவுகளை பொது நலன் வழக்குப்போட்டு ஓங்கித் தட்ட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் இவற்றில் இட ஒதுக்கீடு பெற்று, ஆளும் இடத்திற்கு முஸ்லிம்கள் வரவேண்டும்.

(முஹம்மதே!) உம்மை இப்பூமியிலிருந்து கிளப்பி வெளியேற்றிட அவர்கள் முயன்றனர். அப்போது உமக்குப் பின்னர் அவர்கள் குறைவாகவே தங்கியிருப்பார்கள். (முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்கள் விஷயத்தில் (இதுவே நமது) வழி முறையாகும். நமது வழி முறையில் எந்த மாற்றத்தையும் காண மாட்டீர்!

அல்குர் ஆன் 17 : 76, 77

24.04.2013. 11:55 AM