ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?
“ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன். ஆனால், அது ஹலால் (அனுமதிக்கப்பட்டது) என்று பிறகு தான் தெரிந்து கொண்டேன். நான் அந்த சத்தியத்தை முறிக்கலாமா?”
பதில்
அனுமதிக்கப்பட்ட ஒரு விஷயத்தைத் தடுக்கப்பட்டதாக அவர் நம்பி, அதைச் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்தார் — உதாரணமாக, பூசணிக்காய் ஹராம் என்று நினைத்து, ‘இனிமேல் பூசணிக்காய் சாப்பிட மாட்டேன்’ என்று அல்லாஹ்விடம் சத்தியம் செய்வது போல இவர் சத்தியம் செய்து விட்டார்.. பின்னர், அறிஞர்கள் அவரிடம் பூசணிக்காய் ஹலால் என்று கூறுகிறார்கள். இப்போது அவர் தனது சத்தியத்தை முறிக்கலாமா?
நபி ﷺ அவர்கள் ஒரு முறை குடும்ப விவகாரம் காரணமாக, தேன் ஹலால் என்ற போதிலும், அதைத் தமக்குத் தாமாகவே ஹராமாக்கிக் கொண்டார்கள்.
அப்போது அல்லாஹ் ﷻ ஒரு வசனத்தை இறக்கி இவ்வாறு கேட்டான்:
“நபியே! உம்முடைய மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை ஏன் ஹராமாக்கிக் கொள்கிறீர்?”
திருக்குர்ஆன் 66:2
அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அல்லாஹ் ﷻ நினைவூட்டினான்.
இருப்பினும், அவர்கள் ஒரு சத்தியத்தைச் செய்திருந்ததால், முறிக்கப்பட்ட சத்தியங்களுக்கு எவ்வாறு பரிகாரம் (கப்பாரா) செய்வது என்பதை அல்லாஹ் ﷻ விளக்கினான்.
ஒருவர் ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டு, பிறகு அந்த சத்தியத்தை நிலைநிறுத்துவது தவறு என்று உணர்ந்தால், அவர் அதை முறிக்கலாம்; ஆனால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும். ஒரு சத்தியத்தை முறிப்பதற்கான பரிகாரத்தைப் பற்றி சூரா அல்-மாயிதா (5:89) குறிப்பிடுகிறது:
தனது குடும்பத்திற்கு வழங்கும் சாதாரண உணவைப் போல பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது பத்து ஏழைகளுக்கு ஆடை வழங்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இவை எதற்கும் சக்தி பெறவில்லை என்றால், மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்.
எனவே, ஹலாலான ஒன்றை அறியாமல் ஹராம் என்று கருதி, அதைச் செய்ய மாட்டேன் என்று நீங்கள் சத்தியம் செய்திருந்தால், அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு அதற்கான பரிகாரத்தைச் செய்ய வேண்டும். பத்து ஏழைகளுக்கு உணவளியுங்கள், அல்லது பத்து ஏழைகளுக்கு ஆடை வழங்குங்கள்; இவை இரண்டிற்கும் உங்களால் இயலவில்லை என்றால் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்.






