அமெரிக்க நிறுவனத்தில் பணிசெய்யலாமா?

அமெரிக்கருக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று கத்தரில் இருக்கின்றது. அதில் நான் இஞ்சீனியரிங் வேலை பார்ப்பது கூடுமா?

பதில் :

மார்க்கத்தில் ஒன்றை ஹலால் என்றோ, ஹராம் என்றோ கூறுவதாக இருந்தால் அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறியிருக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்டவரின் நிறுவனத்தில் பணி செய்யக் கூடாது என்று மார்க்கத்தில் கூறப்படவில்லை. எதிரிகளுடனோ, எதிரிகளின் நாட்டவருடனோ கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் இஸ்லாம் கூறவில்லை.

நமக்கு எதிராக நடப்பவர்களிடம் வியாபாரம் செய்வதோ, கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்வதோ தவறல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளான யூதர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துள்ளார்கள். அவர்களுடன் வியாபாரத்தில் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள்.

صحيح البخاري

2068 – حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: ذَكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ، الرَّهْنَ فِي السَّلَمِ، فَقَالَ: حَدَّثَنِي الأَسْوَدُ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِيٍّ إِلَى أَجَلٍ، وَرَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் குறிப்பிட்ட தவணையில் திருப்பித் தருவதாக உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) அவரிடம் தமது இரும்புக் கவசத்தை அடைமானமாக வைத்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2068

صحيح البخاري

1356 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ وَهْوَ ابْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ غُلاَمٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَرِضَ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ، فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ، فَقَالَ لَهُ: «أَسْلِمْ»، فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ: أَطِعْ أَبَا القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَسْلَمَ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனிடம் வந்து அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு “இஸ்லாத்தை ஏற்றுக்கொள்!” என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், “அபுல் காசிம் (என்ற) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு!” என்றார். உடனே அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். நபிகள் நயகம் (ஸல்) அவர்கள், “இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்” எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (1356)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்ட போது அங்கிருந்த யூதர்களுடன் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

صحيح البخاري

2328 – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ  عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَخْبَرَهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَلَ خَيْبَرَ بِشَطْرِ مَا يَخْرُجُ مِنْهَا مِنْ ثَمَرٍ أَوْ زَرْعٍ، فَكَانَ يُعْطِي أَزْوَاجَهُ مِائَةَ وَسْقٍ، ثَمَانُونَ وَسْقَ تَمْرٍ، وَعِشْرُونَ وَسْقَ شَعِيرٍ»، فَقَسَمَ عُمَرُ خَيْبَرَ «فَخَيَّرَ أَزْوَاجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ يُقْطِعَ لَهُنَّ مِنَ المَاءِ وَالأَرْضِ، أَوْ يُمْضِيَ لَهُنَّ»، فَمِنْهُنَّ مَنِ اخْتَارَ الأَرْضَ، وَمِنْهُنَّ مَنِ اخْتَارَ الوَسْقَ، وَكَانَتْ عَائِشَةُ اخْتَارَتِ الأَرْضَ

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைபரில் இருந்த யூதர்களுடன், அங்குள்ள மரங்களில் விளையும் கனிகள், நிலத்தில் விளையும் தானியங்கள் ஆகியவற்றில் பாதியைக் கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்  ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இந்த நிலங்கள் மற்றும் மரங்களின் விளைச்சலிலிருந்து, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தம் மனைவிமார்களுக்கு எண்பது வஸக்குகள் பேரீச்சம் பழமும், இருபது வஸக்குகள் வாற்கோதுமையும் ஆக, நூறு வஸக்குகள் கொடுத்து வந்தனர்.

நூல் :புகாரி 2328

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தின் விரோதிகளாக இருந்த இணைவைப்பாளர்களிடம் நபித்தோழர்கள் பணி புரிந்துள்ளார்கள்.

صحيح البخاري

2275 – حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، حَدَّثَنَا خَبَّابٌ، قَالَ: كُنْتُ رَجُلًا قَيْنًا، فَعَمِلْتُ لِلْعَاصِ بْنِ وَائِلٍ، فَاجْتَمَعَ لِي عِنْدَهُ، فَأَتَيْتُهُ أَتَقَاضَاهُ، فَقَالَ: لاَ وَاللَّهِ لاَ أَقْضِيكَ حَتَّى تَكْفُرَ بِمُحَمَّدٍ، فَقُلْتُ: «أَمَا وَاللَّهِ حَتَّى تَمُوتَ ثُمَّ تُبْعَثَ فَلاَ»، قَالَ: وَإِنِّي لَمَيِّتٌ ثُمَّ مَبْعُوثٌ؟ قُلْتُ: «نَعَمْ»، قَالَ: فَإِنَّهُ سَيَكُونُ لِي ثَمَّ مَالٌ وَوَلَدٌ، فَأَقْضِيكَ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا، وَقَالَ لَأُوتَيَنَّ مَالًا وَوَلَدًا} [مريم: 77]

கப்பாப் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் இரும்பு வேலை தெரிந்த கருமானாக இருந்தேன்; ஆஸ் பின் வாயில் என்பவனிடம் கூலிக்கு வேலை செய்தேன். எனக்குரிய கூலி அவனிடம் தங்கிவிட்டது; அதைக் கேட்பதற்காக அவனிடம் நான் சென்ற போது அவன், “நீர் முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக் கொண்டு) இருக்கும் வரை உமக்குரியதை நான் தர மாட்டேன் என்றான்.  நீ செத்து, பிறகு (உயிர் தந்து) எழுப்பப்படும் வரை அது நடக்காது!’என்றேன். நான் செத்து, திரும்ப எழுப்பப்படுவேனா? என்று அவன் கேட்டான். நான், ஆம்! என்றேன். அதற்கவன், அப்படியானால் அங்கே எனக்குச் செல்வமும் குழந்தைகளும் கிடைப்பர்! அப்போது உமக்குரியதைத் தந்து விடுகிறேன்! என்றான். அப்போது, நம்முடைய வசனங்களை நிராகரித்துவிட்டு, நிச்சயமாக பொருட்செல்வமும், மக்கள் செல்வமும் கொடுக்கப்படுவேன்! என்று கூறியவனை (நபியே) நீர் பார்த்தீரா! என்ற (19:77ஆவது) இறை வசனம் அருளப்பெற்றது.

நூல் : புகாரி 2275

எனவே எதிரி நாட்டவரிடம் பணி புரிவதோ, அவர்கள் தயாரிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதோ மார்க்க அடிப்படையில் ஹராம் அல்ல.

அமெரிக்கா தனது பொருளாதார பலத்தினால் உலகை மிரட்டுகிறது. அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கிறது. எனவே அமெரிக்காவின் பொருட்களைப் புறக்கணித்து அவர்களின் பலத்தைக் குறைப்பது மனித குலத்துக்கு நல்லது என்று நம்முடைய பாதுகாப்பு கருதி தவிர்க்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம். இதில் நாம் உறுதியாகவும் இருக்கிறோம்.

இது மார்க்கக் கட்டளை அல்ல. இதை ஒருவர் மீறி விட்டால் மார்க்கத்தை மீறியவராக மாட்டார்.

இதனால் ஒரு பயனும் இல்லை என்று ஒருவர் கருதலாம்.

நம்முடைய புறக்கணிப்பையும் மிஞ்சும் வகையில் அமெரிக்காவுக்கு பணபலம் உள்ளது என்று சிலர் நினைக்கலாம்.

அல்லது இதை மக்கள் முழுமையாகக் கடைப்பிடித்தால் தான் ஓரளவு பயன் இருக்கும். ஒருவரும் கடிப்பிடிக்காவிட்டால் பயன் இல்லை என்று ஒருவர் கருதலாம்.

அப்படிக் கருதுவோர் அதற்கேற்ப நடந்து கொண்டால் அது மார்க்க அடிப்படையில் குற்றமாகாது. அவரது சம்பாத்தியம் ஹராமாக ஆகாது.