ஹஜ்ஜின் பெயரால் கொள்ளையோ கொள்ளை

(இது 2010 ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை. அன்றைய நிலவரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.)

இந்தியாவில் அதிகம் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில்களில் ஹஜ் தொழில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தனியார்கள் நடத்தும் ஹஜ் சர்வீஸ்கள் முஸ்லிம்களின் மார்க்கப் பற்றை மூலதனமாகக் கொண்டு கொள்ளை அடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்திய அரசாங்கம் ஹாஜிகளுக்கு சிறப்பாகவும் குறைந்த கட்டணத்திலும் சேவை செய்வதற்காக இந்திய அளவிலும், மாநில அளவிலும் ஹஜ் கமிட்டிகளை உருவாக்கியுள்ளதை பெரும்பாலான மக்கள் அறியாததாலும் மனதை மயக்கும் தனியார்களின் போலி விளம்பரங்களாலும் கவரப்பட்ட அப்பாவிகள் ஹஜ் கொள்ளையர்களிடம் சிக்கிச் சீரழிவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

முதலில் இந்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்ட ஹஜ் கமிட்டி மூலம் ஒருவர் ஹஜ் செய்ய விரும்பினால் அவர் பச்சை, வெள்ளை, அஸீஸிய்யா ஆகிய மூன்று தர வரிசையில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

பச்சை எனும் முதல் வகுப்பில் பயணம் செய்ய விரும்புபவர் 124433.00 ரூபாய்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

வெள்ளை எனும் இரண்டாம் வகுப்பைத் தேர்வு செய்பவர் 114196.00 ரூபாய்கள் செலுத்த வேண்டும்.

அஸீஸிய்யா எனும் மூன்றாம் வகுப்பைத் தேர்வு செய்பவர் 107218.00 ரூபாய்கள் செலுத்த வேண்டும்.

இந்த மூன்று வகுப்புக்களிலும் வசதிகளைப் பொருத்தவரை எந்த வேறுபாடும் இல்லை.

ஆறு பேருக்கு ஒரு அறை வழங்கப்படும்.

எந்த விதமான் நோய் ஏற்பட்டாலும் அவர்களுக்கு இலவச மருத்துவ வசதி

மேலும் நாம் செலுத்திய அந்தக் கட்டணத்தில் நம்முடைய உணவுக் கட்டணமும் அடக்கம். எனவே மக்கா சென்றதும் நாம் செலுத்திய பணத்தில் 2100 ரியால்கள் சுமார் 26 ஆயிரம் ரூபாயை ஹஜ் கமிட்டி திருப்பித் தரும். அது ஹஜ் செய்து முடியும் வரை நம்முடைய அனைத்துச் செலவுகளுக்கும் தாராளமாக போதுமானதாகும். சாப்பாடு ஒரு பிரச்சணையே இல்லை.

வகுப்புகளுக்கு இடையே உள்ள ஒரே வேறுபாடு முதல் வகுப்பில் செல்பவர்களுக்கு ஹரமில் இருந்து 500 மீட்டருக்குள் தங்கும் வசதி செய்யப்படும். இரண்டாம் வகுப்புக்கு சற்று தொலைவில் தங்கும் இடம் தரப்படும். மூன்றாம் வகுப்புக்கு அஸீஸிய்யா எனும் தூரமான பகுதியில் தங்கும் இடம் தரப்படும். ஆனாலும் இவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஹரம் வருவதற்கு இலவச பஸ்கள் உள்ளன.

எனவே தூரத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர்கள் ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாயில் தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றலாம்.

ஹரமுக்கு அருகில் தான் தங்க வேண்டும் என்று ஆசைப்படுவோர் ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் ரூபாயில் மன நிறைவுடன் ஹஜ் செய்யலாம்.

ஆனால் ஹஜ் தொழில் செய்யும் தனியார்கள் இரண்டு லடத்து இருபதினாயிரம் முதல் இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் வரை கட்டணம் பெற்றுக் கொள்கின்றனர். மேலும் கடைசி நேரத்தில் ரியால் மதிப்பு கூடி விட்டது; பெட்ரோல் விலை கூடி விட்டது என்று கூறி பத்தாயிரம் இருபதாயிரம் என்று தனியாக இன்னொரு கொள்ளையும் அடிக்கின்றனர். ஹாஜிகளுக்கு வேறு வழி இல்லாமல் எவ்வளவு கேட்டாலும் தந்து விடுவார்கள் என்பதால் இந்தப் பலவீனத்தையும் ஆதயமாக்கிக் கொள்கின்றனர்.

தனியார் ஹஜ் கொள்ளையர்கள் மூலம் ஒருவர் ஹஜ் செய்யும் செலவில் கணவன், மனைவி, ஒரு பிள்ளை என மூவர் ஹஜ் செய்து விடலாம். அந்த அளவுக்கு இவர்கள் அடிக்கும் கொள்ளை அமைந்துள்ளது.

இவர்கள் கொள்ளை அடிப்பதற்கு இரண்டு காரணங்களக் கூறித் தான் மக்களைக் கவர்கிறார்கள். ஒன்று ஹரமுக்கு அருகில் உங்களுக்கு தங்கும் இடம் என்பார்கள். ஆனால் ஹரமுக்கு அருகில் தங்குமிடம் பெறுவதற்கு ஹஜ் கமிட்டி மூலம் சென்றவர்களுக்குத் தான் முன்னுரிமை என்பது மக்களுக்குத் தெரிவதில்லை.

ஹஜ் கமிட்டி மூலம் ஹாஜிகள் அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னால் இவர்கள் ஹாஜிகளை முன் கூட்டியே அழைத்துச் செல்வார்கள். அப்போது ஹரமிற்கு அருகில் இருக்கும் இடம் காலியாக இருப்பதால் அந்த நாட்களில் மட்டும் ஹரமுக்கு அருகில் அந்த இடத்தில் சில நாட்கள் தங்க வைப்பார்கள்.

ஹஜ் கமிட்டி மூலம் ஹாஜிகள் வரத் துவங்கியதும் அந்த மக்களை மக்காவில் இருந்து அழைத்துச் சென்று மதீனாவில் கொண்டு போய் விட்டு விடுவார்கள். ஹஜ் கிரியை ஆரம்பமாகும் போது மினாவுக்கு அழைத்து வருவார்கள்.

ஹஜ்ஜுக்கு நெருக்கமான நாட்களில் ஹஜ் கமிட்டி மூலம் செல்பவர்கள் தான் ஹரமுக்கு அருகில் தங்க வைக்கப்படுவார்கள்.

ஹரமுக்கு அருகில் என்று சொல்வது யாரும் வராத நாட்களில் ஓரிரு நாட்கள் தங்க வைப்பது தான். இதற்குத் தான் இரண்டு மடங்கு கொள்ளை அடிக்கப்படுகிறது.

சில அயோக்கியர்கள் இதிலும் மோசடி செய்து சொன்ன சொல்ல மீறி அதிக தொலைவில் உள்ள அஸிஸிய்யாவில் தங்க வைத்து அதிக ஆதாயம் பார்த்து விடுவார்கள்.)

அடுத்ததாக சுவையான சாப்பாடு என்பது இவர்கள் வீசும் மாய வலை. ஹஜ் கமிட்டி திருப்பித் தரும் 2100 ரியாலில் அதே சுவையான சாப்பாட்டை நாம் சாப்பிட முடியும். ஹஜ் நேரத்தில் மந்தம் ஏற்படுத்தும் சாப்பாட்டை போட்டு சோமபலாக்குவதற்குத் தான் இவ்வளவு பெரிய கொள்ளை அடிக்கப்படுகிறது.

மத்திய அரசிடம் சட்டப்படி அனுமதி பெற்று ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்பவர்கள் அடிக்கும் கொள்ளை இது. இவர்கள் என்ன தான் கொள்ளை அடித்தாலும் உறுதியாக ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள்.

ஆனால் இவர்களையும் மிஞ்சிய கொள்ளையர்களும் உள்ளனர். இவர்கள் ஹஜ் சர்வீஸ் செய்வதற்கு முறையாக அரசிடம் அனுமதி பெறாதவர்கள். இவர்கள் ஹஜ் தொழில் நடத்தும் பெரிய நிறுவனங்களிடம் பேசி வைத்துக் கொண்டு ஒரு ஹாஜிக்கு இவ்வளவு என்ற அடிப்படையில் கமிஷன் பேசிக் கொண்டு தாங்களே ஹஜ் சர்வீஸ் நடத்த சட்டப்படி அனுமதி பெற்றது போல் மக்களீடம் ஏமாற்றி விளம்பரம் செய்வார்கள்.

பெரிய நிறுவனத்திடம் ஒரு லட்சத்து எழுபதாயிரம் என்று பேசிக் கொண்டு மக்களிடம் இரண்டு லட்சத்தி இருபதாயிரம் கறந்து விடுவார்கள். பாக்கர், ஷம்சுத்தின் காசிமி போன்றவர்கள் இந்த வகையினர் ஆவர்.

விமானத்தில் சென்னையில் ஏறி ஜித்தாவில் இறங்கினால் அதற்கு அதிகக் கட்டணம். சென்னையில் ஏறி ஏதாவது நாட்டில் ஓரிரு நாட்கள் தங்கவைத்து இன்னொரு விமானத்தில் ஏற்றி ஜித்தாவுக்கு அனுப்பினால் அதற்கு கட்டணம் குறைவு. டரான்சிட் எனப்படும் இந்த முறையில் ஹாஜிகளை அழித்துச் என்று அலைக்கழித்து ஆதாயம் பார்ப்பவர்களூம் இத்தகையோர் தான்.

எப்படியும் அதிகக் கோட்டா கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இவர்களுடன் பெரிய நிறுவனம் டைஅப் வைத்துக் கொள்ளும். கூடுதலாக இடம் கிடைக்காவிட்டால் இந்த டையப் கும்பலுக்கு அல்வா கொடுத்து விட்டு தங்களிடம் நேரடியாகp பணம் செலுத்தியவர்களை மட்டும் அழைத்துச் சென்று டைஅப் கம்பெனியைக் கைவிட்டு விடுவார்கள். இப்போது தான் ஹாஜிகள் ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

இது தவிர குறைவாக ஹஜ் செய்யும் மாநிலத்தில் உள்ள ஹஜ் தொழில் செய்பவர்களுக்கு தங்களுக்கு வழங்கப்பட்ட கோட்டாவை நிரப்ப முடியாது எனும் போது பிற மாநிலத்தில் உள்ள இது போன்ற கொள்ளையர்கள் மூலம் ஆள் பிடிப்பது வழக்கம். தங்களிடம் புக் செய்தவர்களை வேறு மாநிலத்தின் கோட்டாவில் அழைத்துச் சென்று கொள்ளை அடிக்கும் விபரம் அரசுக்குத் தெரிந்து இந்த ஆண்டு கிடுக்கிப்பிடி போட்டது.

மும்பை டிராவல்ஸ் மூலம் சென்னைவாசி விண்ணப்பித்தால் இது மோசடி சட்ட விரோதம் என்பதால் விசா மறுக்கப்பட்டது. வேறு மாநிலத்தின் மூலம் அழைத்துச் செல்லும் சட்ட விரோதச் செயல் மூலம் ஹாஜிகளை ஏமாற்றியவர்களின் சாயம் இப்போது வெளுத்து விட்டது.

இதில் முக்கியமானவர் அதிகமான மக்களின் ஹஜ்ஜைப் பாழாக்கிய சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் என்று கூறப்படுகிறது. எல்லாமே திருடன்கள் தான் என்று நாம் கூறி வருவது இப்போது உண்மையாகி விட்டது.

இத்தகைய பிராடுகள் மூலம் நாம் ஹஜ் செய்யும் கடமை நமக்கு இல்லை. முறையாக விண்ணப்பித்து ஹஜ் கமிட்டி மூலம் நமக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான். மீண்டும் விண்ணப்பிக்கலாம். இரண்டு முறை குலுக்கலில் நம்க்கு வாய்ப்பு இல்லா விட்டால் மூன்றாம் முறை குலுக்கல் இல்லாமல் நமக்கு வாய்ப்பு கிடைத்து விடும்.

இறையச்சத்திலும் நன்மையிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் உதவாதீர்கள் என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கையை மறந்ததால் தான் இந்த பாதிப்பு.

ஹஜ்ஜை வியாபரமாக்கி இது போன்ற மோசடிகள் வளர்வதற்கு சமுதாயம் இவர்களுக்கு ஒத்துழைக்காமல் இருப்பது அவர்கள் மீதுள்ள கடமையாகும்.

ஆனால் இஸ்லாமியப் பத்திரிகைகள் இஸ்லாமியத் தொலைக்காட்சிகள் இவர்களின் பித்தலாட்டம் குறித்து வாய் திறக்க மாட்டார்கள். காரணம் ஹஜ் கொள்ளையர்கள் தான் இவர்களுக்கு விளம்பரத்தின் மூலம் பணத்தைக் கொட்டிக் கொடுக்கின்றனர். அதை இழகக யாருக்கும் மனம் இல்லை. இரு நூறு பேரை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றால் அரைக் கோடி ரூபாய் லட்டு போல் லாபம் கிடக்கும் போது அதில் சில ஆயிரங்களைப் பத்திரிகைகளுக்கு வழங்குவது அவர்களுக்கு எளிதானது தான்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதைப் பிரசுரமாக வெளியிட்டு ஹஜ் பெயரால் நடக்கும் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவோம்.

குறிப்பு : இது 2010 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஆக்கம். அன்று உள்ள நிலவரப்படி கட்டணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.