இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

மாடுகளைத் துன்புறுத்துதல்:

ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும்.

வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும். ஆண் குத்துச் சண்டை வீரரை பெண் வீரருடன் மோத விடுவதில்லை. குறிப்பிட்டை எடை கொண்டவரை அவரை விட குறைந்த எடை உள்ளவருடன் மோத விடுவதில்லை. போட்டியிடும் இருவரும் சமநிலையில் இருந்தால் தான் அது வீர விளையாட்டு

ஒரு மாட்டை மனிதனையும் மோதவிடுவது கூட சமநிலை இல்லை எனும் போது ஒரு மாட்டை நூற்றுக்கணக்கானோர் பாய்ந்து தாக்குவது எப்படி சமநிலையாகும்? இது எப்படி வீரமாகும்? இது மிருகவதையாகத் தான் பார்க்கப்பாட் வேண்டும்.

மேலும் ஜல்லிக்க்கட்டுக்காக மேலும் பல கொடுமைகளும் நிகழ்த்தப்படுகின்றன.  மாடுகளின் வாலை வாயால் கடித்து அதற்கு வெறியேற்றிவிடுதல், வெறியை அதிகப்படுத்த மாடுகளின் வாயில் சாராயத்தை ஊற்றுதல் போன்ற செயல்களும் அதில் கலந்துள்ளதால் இத்தகைய கொடுமைகளை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகங்களுக்கு மத்தியில் ஓட்டப் பந்தயம் வைத்துள்ளார்கள்; குதிரையேற்றத்தைக் கற்றுக் கொடுக்கச் சொல்லியுள்ளார்கள்; அம்பெறிந்து விளையாடும் போட்டிகளை ஊக்கப்படுத்தியுள்ளார்கள்; மல்யுத்தப் போட்டிகளை ஆதரித்துள்ளார்கள்; இவை எல்லாம் சமநிலையில் அமைந்த வீர விளையாட்டுக்களாகும்

நபிகள் நாயகம் நடத்தியது ஒட்டகங்களுக்கும் ஒட்டகங்களுக்கும் இடையே வைக்கப்பட்ட போட்டி. மாடுகளை ஓடவிட்டு அதை 100 பேர் சேர்ந்து அடக்குவது வேறாகும். விலங்குகளைத் துன்புறுத்துவதை நபிகளார் தடுத்துள்ளார்கள். அந்த விலங்கை அறுக்கும் போது கூட கூர்மையான ஆயுதங்களால் தான் அதை அறுக்க வேண்டும்.

குட்டிக்கு பால் கொடுக்கும் நிலையில் உள்ள விலங்குகளை அறுக்கக் கூடாது; பூனையை பட்டினி போட்ட பெண்ணுக்கு நரக தண்டனை வழங்கப்படும்; பறவைக் குஞ்சுளை அதன் தாயிடத்தில் இருந்து பிரிக்கக்கூடாது; மிருகங்களை பட்டினி போட்டு வதைக்கக் கூடாது என்றெல்லாம் நபிகளார் எச்சரித்துள்ள நிலையில் மாடுகளின் வாலைக் கடித்து குதறுவதையும், மாடுகளை துன்புறுத்துவதையும், அவைகளைப் பாடாய்ப்படுத்துவதையும் இஸ்லாம் எப்படி அங்கீகரிக்கும்?

மேலும் அம்பெறிந்து பயிற்சி எடுப்பதில் நாம் குறிபார்க்கும் போது கூட உயிருள்ள பிராணிகளைக் குறிபார்த்து அம்பெறிந்து பயிற்சி எடுப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள். நாம் அந்த விலங்குகளின் மீது ஏறிப் பயணிப்பது என்பது நமக்குத் தேவையான ஒன்று; அவசியத்தின் காரணமாக அதை நாம் செய்கிறோம்.

தேவையில்லாமல் அதைக் குறிவைத்து அம்பெறிந்து அந்த அம்பு அந்த விலங்குமேல் பட்டு அவை துன்புறுவதை அல்லாஹ்வுடைய தூதர் ஏற்றுக் கொள்ளவில்லை.

மாடுகளை துன்புறுத்துபவர்கள் உழவுத்தொழிலுக்கு அதைப் பயன்படுத்தத்தானே செய்கின்றோம்; அப்போது அதைத் துன்புறுத்துவது மட்டும் நியாயமா எனக் கேள்வி எழுப்புகின்றனர். நாம் அதற்கு ஒரு வேலை கொடுப்பது என்பது வேறு; அதை தேவையில்லாமல் துன்புறுத்துவது என்பது வேறு.

ஒரு தொழிலாளியிடம் ஒரு மாதம் முழுவதும் வேலை வாங்குகின்றோம்; அது மனித உரிமை மீறலாக யாரும் சொல்ல மாட்டார்கள்; அதே நேரத்தில் தேவையில்லாமல் அவரை நூறுபேர் கூட்டமாக அடித்து உதைத்தால் அதை மனித உரிமை மீறல் என்போம்; அதுபோலத் தான் இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிருகங்களை எப்படி நாம் கையாள வேண்டும் என்று காட்டித்தந்துள்ளார்களோ, அந்த வழிமுறைகளுக்கு முற்றிலும் மாற்றமாக நடைபெறும் ஜல்லிக்கட்டை மேற்கண்ட காரணங்களால் முஸ்லிம்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.