கேள்வி :

இருப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

நான் கடந்த மூன்று வருடங்களாக வங்கியில் 2 இலட்சம் ரூபாய் வைத்துள்ளேன். நான் ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது ஒரு தடவை கொடுத்தால் போதுமா?

ஒருவரிடம் ஐந்து இலட்சம் மதிப்புள்ள கடை உள்ளது. வாடகையாக மாதாமாதம் 12,000 ரூபாய் வருமானம் வருகிறது. இப்போது அவர் ஐந்து இலட்சத்திற்கு மட்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது வாடகையாக வரும் 12,000க்கும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

பதில் :

முதல் கேள்விக்கான பதில் :

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றோ, அல்லது வருடத்திற்கு ஒரு முறை தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றோ எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் கிடையாது.

எனவே ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் கொடுத்துவிட்டால் போதுமானதாகும். அது பரிசுத்தமாகிவிடும். மீண்டும், மீண்டும் அல்லது வருடத்திற்கொருமுறை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

கீழே உள்ள ஆக்கத்தை வாசிக்கவும்

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா

https://onlinepj.in/index.php/prayers/prayers-2/zakkath/jakath-ayvu-book

இரண்டாவது கேள்விக்கான பதில் :

ஒருவரிடம் ஐந்து இலட்சம் மதிப்புள்ள கடை இருந்தால் அவர் அதற்கு ஒரு முறை ஜகாத்தை நிறைவேற்றிவிட்டால் அது பரிசுத்தமாகிவிடும். பிறகு ஒவ்வொரு மாதமும் அந்தக் கடையின் மூலம் வரும் வருமானம் வந்தால் அதற்கும் இரண்டரை சதவிகிதம் ஜகாத்தை அவர் வழங்க வேண்டும். ஒருவருக்கு வரும் வருவாய், அவரது சொத்துக்கள், இருப்புக்கள் ஆகிய அனைத்துக்கும் ஜகாத் உண்டு.

இதில் ஏழைகள் அடங்கிவிடக் கூடாது என்பதற்காக ஒரு எல்லைக் கோட்டை இஸ்லாம் வகுத்துள்ளது.

ஐந்து ஊகியா வெள்ளி வைத்து இருப்பவர் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ் கூறுகிறது. ஒரு ஊகியா என்பது 40 திர்ஹமாகும். அன்றைய ஒரு திர்ஹத்தின் இன்றைய எடை 3.6 கிராம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 200 திர்ஹத்தின் எடை 720 கிராம் ஆகும். அதாவது இன்றைய மதிப்பில் 50 முதல் 55 ஆயிரம் ரூபாய் உள்ளவருக்கு ஜகாத் கடமையாகி விடும்.

ஒருவர் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். அவரிடம் வேறு எந்த இருப்பும் இல்லை. அவர் ஜகாத் கொடுக்க மாட்டார். சிறிது சிறிதாக மிச்சம் பிடித்து 720 கிராம் வெள்ளி அளவுக்கு அவரிடம் இருப்பு வந்து விட்டது என்றால் அந்த 720 கிராமுக்கும், அதன் பின் அவருக்கு வரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.

எப்போது 720 கிராம் வெள்ளிக்கும் கீழ் குறைந்து விடுகிறதோ அப்போது ஜகாத் கடமை இல்லை.

ஒருவர் மாதம் மூவாயிரம் சம்பளம் வங்குகிறார். ஆனால் அவரிடம் ஏற்கனவே 720 கிராம் வெள்ளியின் மதிப்புடைய பொருள் இருந்தால் அவர் அந்த 720 கிராம் வெள்ளிக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். அந்த மூன்றாயிரம் ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். எப்போதெல்லாம் அவருக்கு செல்வம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஜகாத் கடமையாகி விடும்.