தொழுகையில் கைகளை உயர்த்துதல் ஓர் ஆய்வு

கடமையான தொழுகைகளிலும், கடமையல்லாத தொழுகைகளிலும் நான்கு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்த வேண்டும்.

  • தொழுகையைத் துவக்கும் போது அல்லாஹு அகபர் கூறி கைகளை உயர்த்துதல்
  • ருகூவுக்குச் செல்லும் போது அல்லாஹு அக்பர் கூறி கைகளை உயர்த்துதல்
  • ருகூவிலிருந்து எழும் போது அல்லாஹு அக்பர் கூறி கைகளை உயர்த்துதல்
  • இரண்டாம் ரக்அத் முடித்து அத்தஹிய்யாத் இருப்பில் இருந்து எழும் போது அல்லாஹு அக்பர் கூறி கைகளை உயர்த்துதல்

இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

صحيح البخاري

735 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ: ” أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلاَةَ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، رَفَعَهُمَا كَذَلِكَ أَيْضًا، وَقَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الحَمْدُ، وَكَانَ لاَ يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ “

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தமது தோள்களுக்கு நேராகத் கைகளை உயர்த்துவார்கள். ருகூஉவிற்காக தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் அவ்வாறே (தோள்களுக்கு நேராக) இரு கைகளையும் மீண்டும் உயர்த்துவார்கள். மேலும் (ருகூவிலிருந்து நிமிரும் போது) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்து’ என்று கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும் போதும் சஜ்தாவிலிருந்து நிமிரும் போதும்) இவ்வாறு செய்ய மாட்டார்கள் (கைகளை உயர்த்த மாட்டார்கள்).

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 735

صحيح البخاري

739 – حَدَّثَنَا عَيَّاشٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ ” إِذَا دَخَلَ فِي الصَّلاَةِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ، وَإِذَا رَكَعَ رَفَعَ يَدَيْهِ، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَفَعَ يَدَيْهِ، وَإِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ رَفَعَ يَدَيْهِ “، وَرَفَعَ ذَلِكَ ابْنُ عُمَرَ إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَوَاهُ ابْنُ طَهْمَانَ، عَنْ أَيُّوبَ، وَمُوسَى بْنِ عُقْبَةَ مُخْتَصَرًا

இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழ ஆரம்பிக்கும் போது தக்பீர் கூறித் தம் கைகளை (தோள்களுக்கு நேராக) உயர்த்துவார்கள். ருகூஉவுக்குச் செல்லும் போதும் கைகளை உயர்த்துவார்கள். சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ எனக் கூறும் போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து நிலைக்கு உயரும் போதும் கைகளை உயர்த்துவார்கள். இவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததாகவும் குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 739

அறிவிப்பவர் : நாஃபிவு

மேற்கண்ட நான்கு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்த வேண்டும் என்பதற்கு இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

தொழுகையைத் துவக்கும் போது மட்டும் தான் கைகளை உயர்த்த வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் ஒரு ஹதீஸைத் தவிர மற்ற அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன.

அறிவிப்பாளர் வரிசை சரியாக அமைந்த அந்த ஒரு ஹதீஸ் இது தான்:

سنن الترمذي

257 – حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ عَلْقَمَةَ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ: «أَلَا أُصَلِّي بِكُمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَصَلَّى، فَلَمْ يَرْفَعْ يَدَيْهِ إِلَّا فِي أَوَّلِ مَرَّةٍ».

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “நபிகள் நாயகம் (ஸல்) தொழுதது போல் தொழுது காட்டட்டுமா?’ என்று கூறி விட்டுத் தொழுது காட்டினார்கள். முதல் தடவை தவிர அவர்கள் கைகளை உயர்த்தவில்லை.

நூல்: திர்மிதி 238

سنن النسائي

1058 – : أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ الْمَرْوَزِيُّ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ أَنَّهُ قَالَ: «أَلَا أُصَلِّي بِكُمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَصَلَّى فَلَمْ يَرْفَعْ يَدَيْهِ إِلَّا مَرَّةً وَاحِدَةً»

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “நபிகள் நாயகம் (ஸல்) தொழுதது போல் தொழுது காட்டட்டுமா?’ என்று கூறி விட்டுத் தொழுது காட்டினார்கள். ஒரு தடவை தவிர அவர்கள் கைகளை உயர்த்தவில்லை.

நஸாயீ

மேற்கண்ட ஹதீஸைப் பொருத்தவரை அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் ஆவர். நான்கு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்த வேண்டும் என்றும், ஒருதட்வை மட்டுமே கைகளை உயர்த்த வேண்டும் என்றும் முரண்பட்ட இரு செய்திகள் வரும் போது இதை எப்படி அணுகுவது?

இரண்டு கருத்துடைய ஹதீஸ்களும் சமமானவையாக இருந்தால் இரண்டையும் செயல்படுத்தலாம் என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும்.

தரத்தில் ஒரு ஹதீஸ் மேலானதாக அதிக நம்பிக்கை உள்ளதாக இருந்தால் அதிக நம்பிக்கை உள்ள ஹதீஸையே நாம் செயல்படுத்த வேண்டும்.

ஹதீஸ் கலையில் மட்டுமின்றி உலக நடைமுறையிலும் நாம் இப்படித் தான் முடிவு செய்கிறோம்.

இந்த இரு கருத்துடைய ஹதீஸ்களை நாம் எடை போட்டால் இரண்டின் தரத்திலும் அதிகமான வேறுபாடுகள் உள்ளன.

நான்கு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்த வேண்டும் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்களை பதினான்கு சஹாபாக்கள் அறிவித்துள்ளனர்.

  • உமர் (ரலி)
  • இப்னு உமர் (ரலி)
  • அலீ (ரலி)
  • வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
  • மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி)
  • அனஸ் (ரலி)
  • அபூ ஹுரைரா (ரலி)
  • அபூ அஸீத் (ரலி)
  • ஸஹ்ல் பின் ஸஅது (ரலி)
  • முஹம்மத் பின் மஸ்லமா (ரலி)
  • அபூ மூஸா (ரலி)
  • ஜாபிர் (ரலி)
  • உமைர் அல்லைஸி (ரலி)
  • இப்னு அப்பாஸ் (ரலி)

ஆகிய 14 நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர்.

ஒரு தடவை மட்டுமே கைகளை உயர்த்த வேண்டும் என்ற கருத்தில் இப்னு மஸ்வூது (ரலி) மட்டுமே அறிவித்துள்ளார்.

14 நபித்தோழர்கள் அறிவிப்பதற்கு மாற்றமாக ஒரு நபித்தோழர் அறிவிப்பதால் அதன் நம்பகத் தன்மை குறைகிறது.

அதிகமானவர்கள் அறிவிப்பதை மறுக்கும் வகையில் ஒரே ஒருவரின் அறிவிப்பு இருந்தால் அந்தக் காரணத்திற்காக ஒரே ஒருவரின் அந்த ஹதீஸை ஏற்காமல் அதிகமானவர்களின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் இப்னு மஸ்ஊத் (ரலி) ஹதீஸை ஏற்க முடியாது

பலரிடம் தவ்றுகள் ஏற்படுவதை விட ஒருவரிடம் தவறு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் ஆரம்ப கால நபித்தோழர் என்றாலும் அவர்கள் செய்திகளை அறிவிப்பதில் கவனக் குறைவாக இருந்துள்ளதை நாம் பார்க்க முடிகிறது.

صحيح مسلم

28 – (534) حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، وَالْأَسْوَدِ، أَنَّهُمَا دَخَلَا عَلَى عَبْدِ اللهِ، فَقَالَ: ” أَصَلَّى مَنْ خَلْفَكُمْ؟ قَالَ: نَعَمْ، فَقَامَ بَيْنَهُمَا، وَجَعَلَ أَحَدَهُمَا عَنْ يَمِينِهِ وَالْآخَرَ عَنْ شِمَالِهِ، ثُمَّ رَكَعْنَا، فَوَضَعْنَا أَيْدِيَنَا عَلَى رُكَبِنَا فَضَرَبَ أَيْدِيَنَا، ثُمَّ طَبَّقَ بَيْنَ يَدَيْهِ، ثُمَّ جَعَلَهُمَا بَيْنَ فَخِذَيْهِ، فَلَمَّا صَلَّى، قَالَ: هَكَذَا فَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ “

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் அல்கமா, அஸ்வத் ஆகிய இருவர் சென்றார்கள். உங்களுக்குப் பின் உள்ள மற்றவர்கள் தொழுது விட்டார்களா என்று இப்னு மஸ்வூத் (ரலி) கேட்டார்கள். இருவரும் ஆம் என்றனர். இப்னு மஸ்வூத் (ரலி) எழுந்து ஒருவரை வலது புறமாகவும், இன்னொருவரை இடது புறமாகவும் நிற்க வைத்து இருவருக்கும் நடுவில் நின்றார்கள். பின்னர் நாங்கள் ருகூவு செய்தோம். அப்போது எங்கள் கைகளை முட்டுக்கால்களில் வைத்தோம். அவர்கள் எங்கள் கைகளைத் தட்டி விட்டு தமது இரு கைகளையும் இரு தொடைகளுக்கு மத்தியில் வைத்தார்கள். தொழுது முடித்த உடன் இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழக் கண்டேன் என்றார்கள்.

நூல் : முஸ்லிம்

மிக ஆரம்ப காலத்தில் ருக்கூவின் போது தொடைகளுக்கு இடையில் கைகளை வைக்கும் வழக்கம் இருந்து பின்னர் மாற்றப்பட்டு விட்டது. ஆனால் இந்தச் செய்தி இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. அல்லது அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.

மேலும் மூவர் இருந்தால் இருவர் பின்னால் நிற்க வேண்டும் என்ற நபி வழிக்கு மாற்றமாக வலப்பக்கம் ஒருவரையும் இடப்பக்கம் ஒருவரையும் நிற்க வைத்து தொழுதுள்ளார்கள்.

இதில் இருந்து தொழுகை விஷயத்தில் இப்னு மஸ்வூது (ரலி) போதுமான அப்டேட் இல்லாமல் இருந்துள்ளார் என்பதை அறியலாம்.

صحيح البخاري

790 – حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي يَعْفُورٍ، قَالَ: سَمِعْتُ مُصْعَبَ بْنَ سَعْدٍ، يَقُولُ: صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي، فَطَبَّقْتُ بَيْنَ كَفَّيَّ، ثُمَّ وَضَعْتُهُمَا بَيْنَ فَخِذَيَّ، فَنَهَانِي أَبِي، وَقَالَ: كُنَّا نَفْعَلُهُ، «فَنُهِينَا عَنْهُ وَأُمِرْنَا أَنْ نَضَعَ أَيْدِينَا عَلَى الرُّكَبِ»

நான் என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ் -ரலி) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூவில்) என் இரு கைகளையும் கோத்து என் இரு தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டேன். அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். பின்னர் அவ்வாறு செய்யக் கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள் மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஸ்அப் பின் ஸஅது

நூல் : புகாரி 790

ஆரம்ப கால நடைமுறை மாற்றப்பட்டு ஆண்டுகள் பல கடந்த பின்பும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் பழைய நடைமுறையிலேயே தொழுதுள்ளார்.

இது அவர்களின் கவனமின்மைக்கு ஆதாரமாக உள்ளது.

மற்றொரு செய்தியைப் பாருங்கள்!

صحيح البخاري

346 – حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: سَمِعْتُ شَقِيقَ بْنَ سَلَمَةَ، قَالَ: كُنْتُ عِنْدَ عَبْدِ اللَّهِ، وَأَبِي مُوسَى، فَقَالَ لَهُ أَبُو مُوسَى: أَرَأَيْتَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِذَا أَجْنَبَ فَلَمْ يَجِدْ مَاءً، كَيْفَ يَصْنَعُ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ: لاَ يُصَلِّي حَتَّى يَجِدَ المَاءَ، فَقَالَ أَبُو مُوسَى: فَكَيْفَ تَصْنَعُ بِقَوْلِ عَمَّارٍ حِينَ قَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ يَكْفِيكَ» قَالَ: أَلَمْ تَرَ عُمَرَ لَمْ يَقْنَعْ بِذَلِكَ، فَقَالَ أَبُو مُوسَى: فَدَعْنَا مِنْ قَوْلِ عَمَّارٍ كَيْفَ تَصْنَعُ بِهَذِهِ الآيَةِ؟ فَمَا دَرَى عَبْدُ اللَّهِ مَا يَقُولُ، فَقَالَ: إِنَّا لَوْ رَخَّصْنَا لَهُمْ فِي هَذَا لَأَوْشَكَ إِذَا بَرَدَ عَلَى أَحَدِهِمُ المَاءُ أَنْ يَدَعَهُ وَيَتَيَمَّمَ فَقُلْتُ لِشَقِيقٍ فَإِنَّمَا كَرِهَ عَبْدُ اللَّهِ لِهَذَا؟ قَالَ: «نَعَمْ»

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), அபூமூஸா (ரலி) ஆகியோர் அருகில் நான் இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம், அபூ அப்திர்ரஹ்மானே! பெருந்துடக்கு ஏற்பட்ட ஒருவருக்கு (குளியலுக்குத்) தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லை என்று பதிலளித்தார்கள். (இதைக் கேட்ட) உடன் அபூமூஸா (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களிடம் (தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்திருந்தால்) உமக்குப் போதுமானதாக அமைந்திருக்கும்’ என்று சொன்னதாக அம்மார் (ரலி) அவர்கள் கூறிய செய்தியை நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், அம்மார் (ரலி) அவர்கள் அச்செய்தியை தம்மிடம் கூறிய போது உமர் (ரலி) அவர்கள் அதைக் கேட்டு மனநிறைவு அடையவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று (திருப்பிக்) கேட்டார்கள். அதற்கு அபூமூஸா (ரலி) அவர்கள், அம்மாரின் சொல்லை விடுங்கள். (தண்ணீர் கிடைக்காவிடில் தயம்மும் செய்து கொள்ளுங்கள் எனும் இந்த (5:6) இறை வசனத்தை என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்கள். ஆயினும் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களுக்கு (தாம் வழங்கும் தீர்ப்புக்கேற்ப அந்த வசனத்திற்கு விளக்கம்) சொல்லத் தெரியாமலேயே, (பெருந்துடக்குடையவர் தண்ணீர் கிடைக்காத போது தயம்மும் செய்யலாம்’ எனும்) இவ்விஷயத்தில் மக்களுக்கு சலுகையளித்தால் யாருக்காவது தண்ணீர் குளிராகத் தெரிந்தால் கூட உளூ செய்வதை விட்டுவிட்டு தயம்மும் செய்யப் போய்விடுவார்கள் என்று சொன்னார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் கூறுகின்றார்கள்:

அப்படியானால் (மக்கள் குளிருக்காக தயம்மும் செய்து விடுவார்கள் எனும்) இந்தக் காரணத்தை முன்னிட்டுத்தான் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் (அந்தச் சலுகையை வழங்க) வெறுத்தார்கள் என்கிறீர்களா? என்று ஷகீக் பின் சலமா அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம் (அதற்காகத் தான் வெறுத்தார்கள்) என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஷகீக் பின் சலமா

நூல் : புகாரி 346

தயம்மும் செய்வதற்கு தெளிவான ஆதாரத்தை – குர்ஆன் வசனத்தை எடுத்துக் காட்டிய பின்பும் இப்னு மஸ்வூத் (ரலி) ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் சுய கருத்தின் அடிப்படையில் நாம் சலுகை அளித்தால் அதை துஷ்பிரயோகம் செய்வார்கள் என்ற பொருத்தமற்ற பதிலைக் கூறியுள்ளதை இதன் மூலம் அறியலாம்.

திருக்குர்ஆனில் 114 அத்தியாயங்கள் உள்ளன என்பதை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் அறிந்து வைத்துள்ளது. ஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) ஃபலக், நாஸ் ஆகிய 113, 114 அத்தியாயங்களை  தமது குர்ஆன் பிரதியில் எழுதவில்லை.

مسند أحمد

21186 – حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ بَهْدَلَةَ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، قَالَ: قُلْتُ لِأُبَيِّ بْنِ كَعْبٍ: إِنَّ ابْنَ مَسْعُودٍ كَانَ لَا يَكْتُبُ الْمُعَوِّذَتَيْنِ فِي مُصْحَفِهِ، فَقَالَ: “أَشْهَدُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَنِي: “أَنَّ جِبْرِيلَ قَالَ لَهُ: قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، فَقُلْتُهَا، فَقَالَ: قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ، فَقُلْتُهَا “. فَنَحْنُ نَقُولُ مَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தனது குர்ஆன் கை எழுத்துப் பிரதியில் 113, 114 அத்தியாயங்களை எழுதாமல் விட்டு விட்டாரே என்று உபை பின் கஅபு (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள் குல் அவூது பிரப்பில் ஃபலக் எனக் கூறுவீராக என்றார். நான் அதை ஓதினேன். குல் அவூது பிரப்பின் நாஸ் என்று கூறுவீராக என்றார் அவ்வாறே நான் கூறினேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) என்னிடம் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியவாறு நானும் கூறுவேன் என்று உபை பின் கஅபு (ரலி) விடையளித்தார்கள்.

நூல் : அஹ்மத்

பொதுவாக இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ்களை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதிகமான நபித்தோழர்களுக்கு மாற்றமாக அறிவித்தால் அவரது அறிவிப்பை விட மற்றவர்களின் அறிவிப்பையே எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே தொழுகையில் நான்கு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்துவதே சரியான நிலைபாடாகும்.