மன்ஜில்கள்

திருக்குர்ஆனை முப்பது பாகங்களாகப் பிரித்தது போல் ஏழு மன்ஜில்களாகவும் திருக்குர்ஆனைச் சிலர் பிரித்துள்ளனர்.

திருக்குர்ஆனின் ஓரங்களில் ஒவ்வொரு மன்ஸிலின் துவக்கத்திலும் மன்ஸில் என்ற சொல் இன்றளவும் அச்சிடப்பட்டு வருகிறது. வாரத்திற்கு ஒரு முறை திருக்குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்க வேண்டும் என்பதற்காக சமஅளவிலான ஏழு பாகங்களாகத் திருக்குர்ஆனைப் பிரித்தனர். இதுவே மன்ஜில் எனப்படுகிறது.

இதுவும் நம்முடைய வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட பிரிவு தானே தவிர அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் பிரித்தது அல்ல. இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வரும் மூலப் பிரதியில் மன்ஜில் என்ற பிரிவு இல்லை.

வாரத்தில் ஒரு முறை திருக்குர்ஆனை ஓதி முடிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளதாக ஹதீஸ்கள் உள்ளன. ஆயினும் தினமும் இந்த அளவு தான் ஓத வேண்டும் என்பது அவரவர் தீர்மானம் செய்ய வேண்டியதாகும். மற்றவர்கள் அதை அளவிட்டுக் கூறுவதும், குர்ஆன் அல்லாததை திருக்குர்ஆனில் எழுதியிருப்பதும் ஏற்க முடியாததாகும்.