மிருகபுத்திரன் என்று கூற மார்க்கத்தில் அனுமதி உண்டா?

மனுஷ்யபுத்திரன் என்பவர் இஸ்லாம் குறித்து தவறாக விமர்சனம் செய்வதற்கு பதிலளிக்கும் போது அவரைப் பற்றி மிருகபுத்திரன் என்று குறிப்பிட்டது ஏன்? இது மார்க்கத்தில் கூடுமா?

மசூது, கடையநல்லூர்

குறிப்பிட்ட மனிதன் மிருகத்துக்குப் பிறந்தான் என்ற கருத்தில் அவ்வாறு கூற அனுமதி இல்லை. ஆனால் மிருகத்தின் தன்மை கொண்டவன் என்ற பொருளில் கூறுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. மார்க்கத்தில் மட்டுமல்ல. எழுத்துலகிலும் முன்மாதிரி உண்டு.

இவரது இயற்பெயர் வேறாக இருந்தும் தன்னை மனுஷ்ய புத்திரன் என்று மாற்றம் செய்து கொண்டார். இதை நேரடிப் பொருளில் அவர் சூட்டிக் கொண்டாரா?

நான் மனிதனுக்குப் பிறந்தவன் என்பதைச் சொல்வதற்காகவா மனுஷ்யபுத்திரன் என்று வைத்துக் கொண்டார்? அப்படியானால் அவரை ஆதரிக்கும் முற்போக்காளர் உள்ளிட்ட அனைவரும் மிருக புத்திரர்கள் என்று ஆகிவிடும். இவர் மனிதனுக்குப் பிறந்தவர் என்பதை யாராவது எந்தக் காலத்திலாவது மறுத்து இருந்தால் அப்போது நான் மனிதனுக்குப் பிறந்தவன் என்று கூறலாம்.

அப்படியானால் எந்த பொருளில் இந்தப் பெயரைச் சூட்டிக் கொண்டார்? மனிதத் தன்மை கொண்ட புத்திரன் என்ற பொருளில் தான் பயன்படுத்துகிறார். அப்படித்தான் அனைவரும் எடுத்துக் கொள்கின்றனர்.

இது போல் தான் மிருகபுத்திரன் என்பதும். மிருகம் போல் சிந்திக்காத தன்மை குறித்து சொல்லப்பட்டது என்பது ஏன் புரியவில்லை?

இவர் ஆட்டுக்கும், மாட்டுக்கும் பிறந்தவர் என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை என்று தெரிந்தும் இதை பாரதூரமாக ஆக்குவோர் எழுத்தாளர்கள் தாமா?

கோ பாலன் என்பதைப் பசுவுக்குப் பிறந்தவன் என்றா இவர்கள் அர்த்தப்படுத்துகிறார்கள்?

அபூஹுரைரா என்ற நபித்தோழர் பூனையின் தந்தை என அழைக்கப்பட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை அனுமதித்தார்கள்.

அபூஹுரைரா பூனைக்குட்டியைப் பெற்றெடுத்தார் என்று அறிவுடைய யாரும் பொருள் கொள்ள மாட்டார்கள். பூனையைச் செல்லமாக வளர்த்ததால் இந்தப் பெயர். அவ்வளவு தான்.

அலீ (ரலி) என்ற நபியின் மருமகனை மண்ணுக்கு தகப்பன் என நபிகள் நாயகம் அழைத்தார்கள்.

இவர் மண்ணைப் பெற்றெடுத்தார் என்ற பொருளில் இது சொல்லப்படவில்லை. அவர் மேனியில் மண் படிந்திருப்பதைப் பார்த்த போது நபிகள் இப்படி சொன்னார்கள்.

இலக்கியத்தையும் மொழிநடையையும் அறியாதவர்கள் தான் இது போல் கேள்வி எழுப்புவார்கள்.

மனுஷ்ய புத்திரன் என்பவர் சிந்திக்காமல் உளறிய தன்மை குறித்துத் தான் அது சொல்லப்பட்டது என்பது அந்தக் கட்டுரையை வாசித்தாலே தெரியும்

29.01.2013. 0:18 AM