முஸ்லிம் தத்தெடுக்க நீதிமன்றத் தடை சரியா?

24.01.12 அன்று வெளியான தினமலர் நாளிதழ் பக்கம் 12ல் (இந்து குழந்தையை முஸ்லிம் தத்தெடுக்க முடியாது – ஐகோர்ட் கிளை உத்தரவு ) என்ற தலைப்பில் இந்துவுக்கு பிறந்த குழந்தையை முஸ்லிம் தத்தெடுப்பதை சட்டம் ஏற்றுக் கொள்ளவில்லை. குரானும் தத்தெடுப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று வந்திருக்கின்றது. குர்ஆன் மாற்று மதத்திலுள்ள குழந்தைகளைத் தத்தெடுக்க அனுமதி வழங்குகின்றதா? இல்லையா? வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் முஸ்லிம்கள் குழந்தைகளை தத்தெடுக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகின்றதே! விளக்கம் தரவும்

– மரியா

திருத்துறைபூண்டி, திருவாரூர்

இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் நாம் தெளிவுபடுத்தியதையே இதற்குப் பதிலாக தருகிறோம்.

எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்த வில்லை. உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை. உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர் வழி காட்டுகிறான். அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே(குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்-ஆன் 33 : 4,5)

இஸ்லாம் போலித்தனமான எல்லாவிதமான உறவுகளையும் நிராகரிக்கிறது. தனது தந்தை இன்னார் என்று தெரிந்திருந்தும் வேறொருவரைத் தனது தந்தை எனக் கூறும் பிள்ளைகள் இருக்கின்றார்கள். யாருக்கோ பிறந்த பிள்ளையைத் தனது பிள்ளை என்று கூறிச் சொந்தம் கொண்டாடுகின்ற தந்தைமார்களும் இருக்கிறார்கள்.

இது வாய் வார்த்தைகளால் மனிதர்கள் செய்து கொள்கின்ற கற்பனை தானே தவிர, ஒருவரது பிள்ளை எந்தக் காரணத்தைக் கொண்டும் இன்னொருவனுக்குப் பிள்ளையாக முடியாது.

ஒரு மனிதன் தனக்குப் பிறக்காத குழந்தைக்கு எக்காரணம் கொண்டும் தந்தையாக முடியாது. இதெல்லாம் மனிதர்களாகச் சொல்லிக் கொள்கின்ற வார்த்தை என்று கூறி போலித்தனமான எல்லா உறவுகளையும் இஸ்லாம் அடியோடு நிராகரிக்கின்றது.

இரத்த சம்பந்தமான உறவுகள் ஏற்பட வேண்டுமானால் உண்மையிலேயே இரத்த சம்பந்தம் இருக்க வேண்டும். அதுதான் நேர்மையானது; நீதியானது எனவும் இவ்வசனம் (33:4,5) அறிவுரை கூறுகின்றது.

எனவே இந்த தீர்ப்பு முஸ்லிம்களைப் பாதிக்காது.

உணர்வு 16:24

21.02.2012. 12:44 PM