விடுபட்ட முன் சுன்னத் தொழுகைகளைப் பின்னர் தொழலாமா?

சுல்தான் முஹ்யித்தீன்

பதில் :

முன் சுன்னத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழத் தவறினால் கடமையான தொழுகையை முடித்த பிறகு நிறைவேற்றலாம். அது போல் விடுபட்ட வித்ரு தொழுகையையும் தொழலாம்.

இதற்கு ஆதாரமாக அறிஞர்கள் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகிறார்கள்.

سنن النسائي

612 – أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ وَعَمْرُو بْنُ يَزِيدَ قَالَا: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ فِي مَسْجِدِ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ فَأُقِيمَتِ الصَّلَاةُ فَجُعِلُوا يُنْتَظَرُونَهُ فَقَالَ: إِنِّي كُنْتُ أُوتِرُ. قَالَ: وَسُئِلَ عَبْدُ اللَّهِ هَلْ بَعْدَ الْأَذَانِ وِتْرٌ؟ قَالَ: «نَعَمْ. وَبَعْدَ الْإِقَامَةِ»، وَحَدَّثَ «عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ» نَامَ عَنِ الصَّلَاةِ حَتَّى طَلَعَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى ” وَاللَّفْظُ لِيَحْيَى

முஹம்மது பின் முன்தஷிர் என்பவர் அம்ர் பின் ஷுரஹ்பீல் என்ற பள்ளியில் இருந்தார். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. தாமதமாக வந்த முஹம்மது பின் முன்தஷிர் “நான் வித்ரு தொழுது கொண்டிருந்தேன்” என்று சொன்னார். (இது குறித்து) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “பாங்குக்குப் பின் வித்ரு தொழுவது கூடுமா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஆம்! இகாமத்துக்குப் பின்னரும் தொழலாம். நபியவர்கள் (சுப்ஹு) தொழாமல் உறங்கி விட்டு சூரியன் உதித்த பின் தொழுதுள்ளார்கள் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்ராஹீம்

நூல்: நஸயீ

இந்த ஹதீஸ் விடுபட்ட வித்ரு தொழுகையைப் பின்னர் தொழலாம் என்பதற்கு நேரடி ஆதாரமாக இல்லை.

இது நபித்தோழரின் செயலாகவே உள்ளது.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூக்கம் காரணமாக விடுபட்ட ஃபஜ்ரு தொழுகையை சூரியன் உதித்த பின் தொழுதார்கள் என்பதைத் தான் இந்த நபித்தோழர் வித்ருக்கு ஆதாரமாகக் காட்டுகிறார். ஆனால் இது வித்ரு தொழுகையைப் பின்னர் தொழலாம் என்பதற்கு ஆதாரமாக ஆகாது. கடமையான தொழுகைக்கு உரிய ஆதாரத்தை கடமையல்லாத தொழுகைக்கு ஆதாரமாகக் காட்ட முடியாது.

எனவே இதை ஆதாரமாகக் காட்டலாகாது என்றாலும் விடுபட்ட சுன்னத்தான தொழுகையைப் பின்னர் தொழலாம் என்பதற்கு வேறு ஆதாரங்கள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நபித்தோழர் ஃபஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரக்அத்தை ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றிய பின் தொழுதுள்ளார். இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.

صحيح ابن حبان

1563- أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ وَوَصِيفُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَافِظُ بِأَنْطَاكِيَةَ قَالَا حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ قَالَ حَدَّثَنَا أَسَدُ بْنُ مُوسَى قَالَ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَيْسِ بْنِ قَهْدٍ، أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ وَلَمْ يَكُنْ رَكَعَ رَكْعَتَيِ الْفَجْرِ فَلَمَّا سَلَّمَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ يَرْكَعُ رَكْعَتَيِ الْفَجْرِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ إِلَيْهِ فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيْهِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் நான் தொழவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்த பிறகு நான் எழுந்து (விடுபட்ட முன்ன சுன்னத்தான) பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

அறிவிப்பவர் : கைஸ் (ரலி)

நூல் : இப்னுஹிப்பான்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹ்ருடைய பின் சுன்னத் இரண்டு ரக்அத்களை அஸர் தொழுகைக்குப் பின் தொழுதுள்ளார்கள்.

صحيح البخاري

1233 – حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، وَالمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ أَزْهَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، أَرْسَلُوهُ إِلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالُوا: اقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنَّا جَمِيعًا، وَسَلْهَا عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ صَلاَةِ العَصْرِ، وَقُلْ لَهَا: إِنَّا أُخْبِرْنَا عَنْكِ أَنَّكِ تُصَلِّينَهُمَا، وَقَدْ بَلَغَنَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهَا، وَقَالَ ابْنُ عَبَّاسٍ وَكُنْتُ أَضْرِبُ النَّاسَ مَعَ عُمَرَ بْنِ الخَطَّابِ عَنْهَا، فَقَالَ كُرَيْبٌ: فَدَخَلْتُ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَبَلَّغْتُهَا مَا أَرْسَلُونِي، فَقَالَتْ: سَلْ أُمَّ سَلَمَةَ، فَخَرَجْتُ إِلَيْهِمْ، فَأَخْبَرْتُهُمْ بِقَوْلِهَا، فَرَدُّونِي إِلَى أُمِّ سَلَمَةَ بِمِثْلِ مَا أَرْسَلُونِي بِهِ إِلَى عَائِشَةَ، فَقَالَتْ أُمُّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْهَا، ثُمَّ رَأَيْتُهُ يُصَلِّيهِمَا حِينَ صَلَّى العَصْرَ، ثُمَّ دَخَلَ عَلَيَّ وَعِنْدِي نِسْوَةٌ مِنْ بَنِي حَرَامٍ مِنَ الأَنْصَارِ، فَأَرْسَلْتُ إِلَيْهِ الجَارِيَةَ، فَقُلْتُ: قُومِي بِجَنْبِهِ فَقُولِي لَهُ: تَقُولُ لَكَ أُمُّ سَلَمَةَ: يَا رَسُولَ اللَّهِ، سَمِعْتُكَ تَنْهَى عَنْ هَاتَيْنِ، وَأَرَاكَ [ص:70] تُصَلِّيهِمَا، فَإِنْ أَشَارَ بِيَدِهِ، فَاسْتَأْخِرِي عَنْهُ، فَفَعَلَتِ الجَارِيَةُ، فَأَشَارَ بِيَدِهِ، فَاسْتَأْخَرَتْ عَنْهُ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «يَا بِنْتَ أَبِي أُمَيَّةَ، سَأَلْتِ عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ العَصْرِ، وَإِنَّهُ أَتَانِي نَاسٌ مِنْ عَبْدِ القَيْسِ، فَشَغَلُونِي عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ بَعْدَ الظُّهْرِ فَهُمَا هَاتَانِ»

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அஸருக்குப் பின்) இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடை செய்ததை நான் கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அஸர் தொழுதுவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுததை நான் பார்த்தேன். தொழுதுவிட்டு எனது வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என்னுடன் அன்சாரிகளில் பனூஹராம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை, தொழுதுகொண்டிருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுப்பி, ” நீ அவர்களுக்கு அருகில் சென்று அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே?’ என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தம் கைகளினால் சைகை செய்தால் நீ பின்வாங்கி விடு!”  எனக் கூறி அனுப்பினேன். அப்பெண்ணும் கூறப்பட்டது போன்றே செய்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் கைகளால் சைகை செய்த போது அப்பெண்மணி திரும்பி வந்து விட்டார். தொழுகையை முடித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அபூ உமைய்யாவின் மகளே! அஸருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்களைப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையைச் சேர்ந்தவர்கள் வந்ததால் லுஹருக்குப் பின்னால் உள்ள இரண்டு ரக்அத்களை நான்  தொழ முடியவில்லை; அத்தொழுகையே இந்த இரண்டு ரக்அத்களாகும்” என்றார்கள் என உம்மு ஸலமா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.

நூல் : புகாரி 1233

விடுபட்ட சுன்னத்தான தொழுகைகளைத் தொழலாம் என்று இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தவறிப்போன வித்ருத் தொழுகையையும் பின்னர் தொழலாம்.