நிர்வாணமாகக் குளிப்பதும் உளூச் செய்வதும் கூடுமா?

கேள்வி: கடமையான குளிப்பை நிர்வாணமாகக் குளிப்பதும் நிர்வாணமாக உளுச் செய்வதும் கூடுமா?

முஹம்மது நஸீர்

பதில்:

மற்றவரின் பார்வை படும்படி நிர்வாணமாகக் குளிப்பது தடுக்கப்பட்டதாகும்.

3497 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ نُفَيْلٍ حَدَّثَنَا زُهَيْرٌ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ الْعَرْزَمِيِّ عَنْ عَطَاءٍ عَنْ يَعْلَى أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَغْتَسِلُ بِالْبَرَازِ بِلَا إِزَارٍ فَصَعَدَ الْمِنْبَرَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَيِيٌّ سِتِّيرٌ يُحِبُّ الْحَيَاءَ وَالسَّتْرَ فَإِذَا اغْتَسَلَ أَحَدُكُمْ فَلْيَسْتَتِرْ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ عَنْ عَطَاءٍ عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا الْحَدِيثِ قَالَ أَبُو دَاوُد الْأَوَّلُ أَتَمُّ رواه أبوداود

ஒரு மனிதர் வெட்ட வெளியில் கீழாடை இல்லாமல் குளிப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனடியாக மிம்பரில் ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றினார்கள். பிறகு நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படக் கூடியவனும் (தனக்கு) திரையேற்படுத்திக் கொள்பவனும் ஆவான். அவன் வெட்கத்தையும், திரையிட்டுக் கொள்வதையும் விரும்புகின்றான். உங்களில் ஒருவர் குளித்தால் அவர் திரையிட்டுக் கொள்ளட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : யஃலா பின் உமைய்யா (ரலி)

நூல் : அபூதாவூத்

மேலும் ஒருவர் தனியாக குளியலறையில் குளிக்கும் போதும் சரி அல்லது தனிமையில் இருக்கும் போதும் சரி தன்னுடைய அந்தரங்கத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது இறையச்சத்தின் அடையாளமாகும்.

பின்வரும் ஹதீஸிலிருந்து இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

2693 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَوْرَاتُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ قَالَ احْفَظْ عَوْرَتَكَ إِلَّا مِنْ زَوْجَتِكَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُكَ فَقَالَ الرَّجُلُ يَكُونُ مَعَ الرَّجُلِ قَالَ إِنْ اسْتَطَعْتَ أَنْ لَا يَرَاهَا أَحَدٌ فَافْعَلْ قُلْتُ وَالرَّجُلُ يَكُونُ خَالِيًا قَالَ فَاللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَجَدُّ بَهْزٍ اسْمُهُ مُعَاوِيَةُ بْنُ حَيْدَةَ الْقُشَيْرِيُّ وَقَدْ رَوَى الْجُرَيْرِيُّ عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ وَهُوَ وَالِدُ بَهْزٍ رواه الترمذي

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுடைய மானங்களை யாரிடம் மறைக்க வேண்டும்? யாரிடம் மறைக்க வேண்டியதில்லை? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் உன்னுடைய மனைவி, அல்லது உனது அடிமைப் பெண்கள் ஆகியோரிடத்தில் தவிர மற்றவரிடம் உனது மானத்தை மறைத்துக் கொள் என்று சொன்னார்கள். ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் இருக்கும் போது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் முடிந்த அளவுக்கு மற்றொருவர் (உன்) மானத்தைப் பார்க்காதவாறு நடந்து கொள் என்றார்கள். ஒருவர் தனியாக இருக்கும் போது? என்று நான் கேட்டதற்கு அல்லாஹ் வெட்கப்படுவதற்கு மிகவும் தகுதியானவன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி)

நூல் : திர்மிதி

17.01.2012. 0:06 AM